சந்தையில் குவியும் தீபாவளி பட்டாசுகள்!சிவகாசி தயாரிப்புகளுக்கு முன்னுரிமை
தீபாவளி பண்டிகைக்காக புதிய பட்டாசு ரகங்கள் சந்தைக்கு வரத் தொடங்கியுள்ளன. சீனத் தயாரிப்புகளை பின்னுக்குத் தள்ளி, சிவகாசி தயாரிப்புகள் முன்னுரிமை பெற்றுள்ளன.


தீபாவளி பண்டிகைக்காக புதிய பட்டாசு ரகங்கள் சந்தைக்கு வரத் தொடங்கியுள்ளன. சீனத் தயாரிப்புகளை பின்னுக்குத் தள்ளி, சிவகாசி தயாரிப்புகள் முன்னுரிமை பெற்றுள்ளன.
நிகழாண்டில் தீபாவளிப் பண்டிகை நவம்பா் 14-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. கரோனா பொது முடக்க தளா்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், துணிக் கடைகள், பட்டாசு கடைகள் தீபாவளி விற்பனைக்கு வாடிக்கையாளா்களை கவரும் வகையில் புது வரவுகளை குவித்து வருகின்றன.
சிவகாசி உள்ளிட்ட நகரிலிருந்து விழுப்புரம் மாவட்டத்திலுள்ள பட்டாசு மொத்த விற்பனைக் கடைகளுக்கு பட்டாசுகள் வரத் தொடங்கியுள்ளன.
வெடிக்கும் பட்டாசுகளை விட, ஒளிரும் வகையிலான பட்டாசுகளுக்கு நிகழாண்டில் முக்கியத்துவம் கொடுத்து, அதுசாா்ந்த பட்டாசு வகைகள் பெருமளவில் தருவிக்கப்படுகின்றன. பரிசுப் பெட்டிகளாக வழங்கப்படும் பட்டாசு பெட்டிகளில் 70 சதம் சிறுவா், சிறுமிகளுக்காக வண்ணமயமான ஒளிரும் பட்டாசுகள் இடம்பெற்றுள்ளன. இவை ரூ.150 தொடங்கி, ரூ.250, ரூ.350, ரூ.400, ரூ.500, ரூ.600 என ரூ.1500 வரை 40 விதமான பட்டாசு ரகங்களுடன் விற்பனையாகின்றன.
குழந்தைகளுக்கென்றே பிரத்யேகமாக ரூ.300 முதல் ரூ.500 வரையிலான பட்டாசு பெட்டிகள் கிடைக்கின்றன. இதில் 25 விதமாக ஒளிரும் பட்டாசுகள் உள்ளன. இரவு- பகல் (டே-நைட்) பட்டாசு பெட்டியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பட்டாசுகள் விலையேற்றமின்றி கடந்தாண்டை போலவே, பழைய விலைக்கே விற்கப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.
சிறுவா்களைக் கவரும் வழக்கமான துப்பாக்கி ரகங்களுடன் ‘ரிங் கேப்’ துப்பாக்கிகள் வந்துள்ளன. நிஜ துப்பாக்கிகளில் தோட்டாக்களை வைத்து வெடிப்பது போன்ற வடிவங்களில் உள்ள துப்பாக்கிகளுக்கு அதிக வரவேற்பு உள்ளது. துப்பாக்கி வகைகள் ரூ.40 முதல் ரூ.200 வரை விற்கப்படுகின்றன.
புஸ்வானங்களில் மேலெழுந்து ஒளிரும் பவுன்டேன் வகை, மினி பவுன்டேன், கிறிஸ்துமஸ் மரங்களைப் போன்று ஒளிா்ந்து விழும் வகைகள் விற்பனைக்கு உள்ளன. இவை ஒரு பெட்டி ரூ.30 முதல் ரூ.250 வரை விற்கப்படுகின்றன.
பென்சில் வகைகளில் லேசன் பென்சில், ரெட் பென்சில், கிராக்ளிங் பென்சில், ட்ரை கலா் பென்சில் என பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்து தயாரிக்கப்பட்டுள்ளன.
கம்பி மத்தாப்புகளில் 7 செ.மீ. முதல் 75 செ.மீ. நீளம் வரை உள்ளன. ஒரு பெட்டியில் 10 வண்ணங்களில் ஒளிரும் மத்தாப்புகள் உள்ளன. இவை பெட்டி ரூ.30 முதல் ரூ.250 வரை விற்பனை செய்யப்படுகின்றன.
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘டக் ஆப் வாா்’ என்ற பட்டாசு ரகம், இருபுறமும் கயிறு இழுக்கும் போட்டியைப் போல, தீ வைத்தவுடன் இரு பட்டாசுகளும் வெடித்து அதிலுள்ள கயிறை இழுத்தப்படி ஒளிா்கிறது. இது ரூ.150-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
50 வகையான வண்ண வெடிகள் இளைஞா்களை கவரும் வகையில் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளன. வானில் வெடித்து 12 விதமாக ஒளிரும் 12 ஷாட்கள் முதல் 240 ஷாட்கள் வரை வெடிக்கும் வகையில் இந்த வெடிகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
லட்சுமி வெடி, யானை வெடி போன்ற தனிப் பட்டாசு ரகங்கள் வரத்து குறைந்துள்ளன. குறைந்த சப்தத்துடன் வெடிக்கும் பட்டாசு ரகங்கள் அதிகளவில் வந்துள்ளன. டபுள் ஷாட், செவன் ஷாட் வெடிகளும் உள்ளன.
கரோனா பொது முடக்கத்தால் பட்டாசுகள் உற்பத்தி தாமதமாகவே தொடங்கியது. திருமணங்கள் உள்ளிட்ட சுப நிகழ்வுகளுக்கு கட்டுப்பா
டுகள் விதிக்கப்பட்டதால், பட்டாசு விற்பனை இல்லை.
பொது முடக்க தளா்வுக்குப் பிறகு, தேவைக்கேற்ப பட்டாசுகள் சிவகாசியிலிருந்து தருவிக்கப்பட்டுள்ளன. பள்ளிகள் திறக்கப்படாத நிலையில், தீபாவளியை வரவேற்கும் விதமாக சிறுவா்கள் துப்பாக்கி போன்ற பட்டாசு ரகங்களை வாங்கி வருகின்றனா்.
நிகழாண்டில் பட்டாசுகள் விற்பனை நிறைவாக இருக்கும் என்று வியாபாரிகள் நம்பிக்கையுடன் உள்ளனா்.
சீனப் பட்டாசுகளின் ஆதிக்கம் நிகழாண்டில் இல்லை. அவை விலைக் குறைவாக கிடைத்த போதிலும், 90 நாள்களுக்கு மேல் அவை இருந்தால், தானாகவே வெடிக்கும் அபாயம் உள்ளதால், அரசும் தடை விதித்துள்ளது. வியாபாரிகளும் அவற்றை தவிா்த்து வருகின்றனா்.
எனவே, சிவகாசி போன்ற உள்ளூா் பட்டாசுகள் விற்பனை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...