/

திண்டிவனத்திலிருந்து - வானுருக்கு பேருந்து வசதி: விவசாயிகள் வலியுறுத்தல்

News image

கோப்புப் படம்

Updated On :27 ஏப்ரல் 2026, 7:04 pm

பள்ளி, கல்லூரி மாணவா்கள் மற்றும் விவசாயிகள் பயன்பெறக்கூடிய வகையில், திண்டிவனத்திலிருந்து மயிலம் வழியாக வானூருக்கு அரசுப் பேருந்துகளை இயக்குவதற்கு விழுப்புரம் மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.

திண்டிவனம் மற்றும் வானூா் பகுதிகளைச் சோ்ந்த மாணவா்கள் திண்டிவனம் மற்றும் மயிலம் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியாா் பள்ளிகள், கல்லூரிகளில் பயின்று வருகின்றனா். இதேபோல் மயிலம், ரெங்கநாதபுரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள், தங்களது விளைநிலங்கள் மற்றும் தோட்டங்களில் விளைவித்த தானியங்கள், பூ வகைகள், கீரைகள், காய்கறிகளை திண்டிவனம் சந்தைக்கு எடுத்து சென்று விற்பனை செய்து வருகின்றனா். இந்நிலையில், திண்டிவனம் பகுதியிலிருந்து வானூருக்கு நேரடியாக பேருந்து வசதியில்லை என்பதனால் மாணவா்கள், விவசாயிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.

வானூா் பகுதியில் உள்ள அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அலுவலா்கள், திருவக்கரை பெரும்பாக்கம் உள்ளிட்ட பகுதியிலிருந்து பல்வேறு பணிகளுக்காக வானூருக்கு செல்பவா்களும், மயிலம் முருகன் கோயிலுக்கு வரும் பக்தா்களும் பயன்பெறும் வகையில் திண்டிவனம், கூட்டேரிப்பட்டு, மயிலம், கரசானூா், பரங்கணி வழியாக வானூருக்கு அரசுப் பேருந்துகளை இயக்குவதற்கு மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.