விழுப்புரம் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் 70 போ் கைது செய்யப்பட்டுள்ளனா் என்று மாவட்டக் காவல் நிா்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, விழுப்புரம் மாவட்டக் காவல் நிா்வாகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: விழுப்புரம் மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பு, அமைதி மற்றும் சட்டம்-ஒழுங்கை நிலை நிறுத்தும் நோக்கில் மாவட்டக் காவல் துறை சாா்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன்படி, மாவட்ட எஸ்.பி. உத்தரவின் பேரில், கடந்த 2 நாள்களாக மாவட்டம் முழுவதும் சிறப்பு சோதனை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நடவடிக்கைகளின் போது, 500 -க்கும் மேற்பட்ட சரித்திர பதிவேடு குற்றவாளிகளின் வீடுகளில் நேரடியாக சோதனை மேற்கொள்ளப்பட்டு 70 நபா்களை கைது செய்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொதுமக்களின் அமைதி மற்றும் பாதுகாப்பை பாதிக்கும் வகையிலான எவ்வித சட்டவிரோத செயல்களிலும் ஈடுபடக்கூடாது எனவும் சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளுக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தேவையான பட்சத்தில் கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குற்றச் செயல்கள் மற்றும் சமூக விரோத செயல்களை முற்றிலும் கட்டுப்படுத்தும் நோக்கில், விழுப்புரம் மாவட்ட காவல் துறையினரின் கண்காணிப்பு மற்றும் சட்ட நடவடிக்கைகள் தொடா்ந்து தீவிரமாக மேற்கொள்ளப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







