விவசாய சாகுபடி முறையை இயந்திரமயமாக்கினால் கூடுதல் லாபம் பெற முடியும் என்றார் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் எம்.சி. சம்பத்.
கடலூர் மஞ்சக்குப்பத்தில் உழவர் பெருவிழா சனிக்கிழமை நடந்தது. விழாவுக்கு, தலைமை வகித்து ஆட்சியர் ரா.கிர்லோஷ்குமார் பேசுகையில், "விவசாய உற்பத்தியைப் பெருக்க உயர்ந்த தொழில்நுட்பங்களை எப்படி எல்லாம் பயன்படுத்துவது என்பது பற்றி விவசாயிகள் தெரிந்து கொள்வதற்காகவே இதுபோன்ற உழவர் விழாக்கள் நடத்தப்படுகின்றன.
குறைந்த பரப்பளவில் அதிக விளைச்சல் பெருக்குவது குறித்தும் இங்குள்ள கண்காட்சியின் வாயிலாக விவசாயிகளுக்கு விளக்கப்பட்டுள்ளது' என்றார்.
விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் பேசியது, "உழவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியில் வீட்டு காய்கறித் தோட்டம் எவ்வாறு அமைப்பது என்பது பற்றி தெளிவாக காண்பித்துள்ளனர்.
இது தவிர எலி ஒழிப்பது எப்படி?, பயிர்களுக்கு வரும் நோய்கள், அதைத் தடுக்கும் முறைகள் பற்றி கண்காட்சியில் விளக்கப்பட்டுள்ளது.
வேளாண் சாகுபடியில் விவசாயிகள் இயந்திரமயமாக்கிட வேண்டும். அப்போதுதான் விவசாயிகளுக்கு அதிக லாபம் கிடைக்கும்' என்றார்.
வேளாண் இணை இயக்குநர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார். மாவட்ட ஊராட்சித் தலைவர் மல்லிகா வைத்திலிங்கம், அதிமுக நகரச் செயலர் குமரன், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவவர் மணிமேகலை பழனிச்சாமி, நகர்மன்ற துணைத் தலைவர் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







