இலங்கைத் தமிழர் முகாம்களில் மத்தியக் குழு ஆய்வு
கடலூர் மாவட்டத்திலுள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் மத்தியக் குழுவினர் திங்கள்கிழமை ஆய்வு செய்தனர்.


கடலூர் மாவட்டத்திலுள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் மத்தியக் குழுவினர் திங்கள்கிழமை ஆய்வு செய்தனர்.
இந்த மாவட்டத்தில் விருத்தாசலம், காட்டுமன்னார்கோவில், குறிஞ்சிப்பாடி, அம்பலவாணன்பேட்டை ஆகிய 4 இடங்களில் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த முகாம்களில் ஆயிரத்து 398 பேர் வசித்து வருகின்றனர். இவர்களின் குறைகளை அறியவும், அவர்கள் சொந்த ஊர் திரும்பும் மனநிலையில் உள்ளனரா என்பதை தெரிந்துகொள்ளும் வகையிலும் மத்திய உள்துறை அமைச்சக செயலர்கள் எஸ்.கே.பரிதா, சிட்டீஷ்குமார் ஆகிய இருவரும் திங்கள்கிழமை நேரில் ஆய்வு செய்தனர்.
விருத்தாசலம் முகாமில் தங்கியிருக்கும் 77 குடும்பத்தினரை மத்தியக் குழுவினர் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தனர்.
அவர்களிடம் இலங்கை அகதிகள் அளித்த மனுவில், இரட்டைக் குடியுரிமை, வாக்குரிமை, சாதிச் சான்று, ஓட்டுநர் உரிமம், இலங்கை சென்றுவர கப்பல் போக்குவரத்து வசதி உள்ளிட்டவை செய்துதர வேண்டும் என வலியுறுத்தினர். முகாமில் வசிக்கும் ராஜலதா என்பவர் கூறியதாவது: எங்களுக்கு சாதிச் சான்று கிடைக்கவில்லை. ஓட்டுநர் உரிமம் தர மறுக்கின்றனர். இதனால் பல்வேறு பிரச்னைகளை சந்திக்க நேரிடுகிறது. பிளஸ்-2 முடித்த எங்களது பிள்ளைகளுக்கு அரசுக் கல்லூரியில் இடம் கிடைப்பதில்லை. அரசு வேலையும் கிடைப்பதில்லை. எனவே, இதற்கு உரிய வழிவகை மேற்கொள்ளவேண்டும் என்றார். ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் கோ.விஜயா, விருத்தாசலம் கோட்டாட்சியர் சந்தோஷிசந்திரா ஆகியோர் உடனிருந்தனர். இந்த முகாமில் இருந்து 6 பேர் ஏற்கெனவே இலங்கை சென்றுள்ளனர். மேலும் சிலர் சொந்த நாட்டுக்கு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளனர். அதுகுறித்து ஆய்வு செய்து வருவதாக கோட்டாட்சியர் தெரிவித்தார்.
இதேபோல, காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள குப்பங்குழி முகாமில் மத்தியக் குழுவினர் ஆய்வு செய்தனர். இந்த முகாமில் 75 குடும்பங்களைச் சேர்ந்த 243 பேர் வசித்து வருகின்றனர். இங்கிருந்து இதுவரை 30 பேர் இலங்கை திரும்பியுள்ளனர். இந்த முகாமில் ஆய்வு செய்த மத்தியக் குழுவினர், அகதிகளுக்கு கிடைக்கும் நலத் திட்ட உதவிகள், அவர்களின் வாழ்வாதார நிலை குறித்து கேட்டறிந்தனர்.
முகாம் தலைவர் சுமன் மத்தியக் குழுவினரிடம் அளித்த மனு: அகதிகளுக்கான பணக்கொடையை அதிகரிக்க வேண்டும். தமிழக முகாம்களில் பிறந்தவர்களுக்கு இந்தியக் குடியுரிமை, வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். இலங்கை செல்ல விரும்பும் அகதிகளின் வீட்டு உபயோகப் பொருள்களை குறைந்த செலவில் கொண்டு செல்ல வாய்ப்பளிக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.
ஆய்வின்போது, இலங்கை மறுவாழ்வுத் திட்ட தனி அலுவலர் சுப்ரமணியன், உதவி ஆணையர் ரமேஷ், சிதம்பரம் சார்-ஆட்சியர் ராஜேந்திரன், தாசில்தார் ஜெயந்தி ஆகியோர் உடனிருந்தனர்.
குறிஞ்சிப்பாடியில் உள்ள முகாமில் 171 குடும்பத்தினரும், குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன்பேட்டை முகாமில் 114 குடும்பத்தினரும் வசித்து வருகின்றனர்.
இந்த முகாம்களிலும் மத்தியக் குழுவினர் ஆய்வு செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...