சென்னையில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திமுகவினர் வியாழக்கிழமை சாலை மறியல், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு பொறுப்பேற்று தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, காவல் துறை டிஜிபி ராஜேந்திரன் ஆகியோர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னையில் தலைமைச் செயலகம் முன் வியா ழக்கிழமை திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து அவரை காவல் துறையினர் கைது செய்தனர். இதைக் கண்டித்து கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திமுகவினர் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கடலூர்: கடலூரில் திமுகவினர் நகர அலுவலகத்திலிருந்து ஊர்வலமாகச் சென்று பாரதிசாலை சந்திப்பில் மறியலில் ஈடுபட்டனர். இதில் பங்கேற்ற தேர்தல் பணிக்குழு செயலர் இள.புகழேந்தி, நகரச் செயலர் கே.எஸ்.ராஜா உள்பட 32 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
விருத்தாசலம்: விருத்தாசலம் பாலக்கரையில் திமுக மேற்கு மாவட்டச் செயலர்
சி.வெ.கணேசன் எம்எல்ஏ தலைமையில் சாலை மறியல் நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஒன்றியச் செயலர் தண்டபாணி உள்பட சுமார் 30 பேர் கைது செய்யப்பட்டனர்.
திட்டக்குடி: திட்டக்குடி பேருந்து நிலையம் அருகே ஒன்றியச் செயலர் அமிர்தலிங்கம் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 13 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
வடலூர்: வடலூர் பேருந்து நிலையம் அருகே குறிஞ்சிப்பாடி ஒன்றிய திமுக செயலர் சிவக்குமார் தலைமையில் சுமார் 30 பேர் மறியலில் ஈடுபட்டனர். இதேபோல, மந்தாரக்குப்பம், வானமாதேவி கூட்டுச் சாலை அருகே, கம்மாபுரம் ஒன்றிய திமுக செயலர் திருமால்வளவன் தலைமையில் 23 பேர் மறியலில் ஈடுபட்டனர்.
நெய்வேலி: திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, நெய்வேலி ஆர்ச் கேட் அருகே எம்எல்ஏ சபா.ராஜேந்திரன் தலைமையில் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட 200 பேரை போலீஸார் கைது செய்தனர்.
மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ஞானமணி, இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜேஷ், பண்ருட்டி வடக்கு ஒன்றியச் செயலர் ராதாகிருஷ்ணன், நெய்வேலி நகரிய பொறுப்புக் குழு உறுப்பினர்கள் நடராஜன், கருப்பன், ஊராட்சி செயலர் சபா.பாலமுருகன் உள்ளிட்ட 200 பேர் மறியலில் பங்கேற்றனர். இவர்களை நெய்வேலி நகரிய போலீஸார் கைது செய்து, வட்டம் 20-இல் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்து மாலையில் விடுவித்தனர்.
காட்டுமன்னார்கோவில்: மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து காட்டுமன்னார்கோவில் கச்சேரி சாலையில் திமுக சார்பில் ஒன்றியச் செயலர் முத்துசாமி தலைமையில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர் ராமலிங்கம், அவைத் தலைவர் கருணாநிதி, சுப்பிரமணியன், மாறன், செல்வம், சொர்ணம், அறிவு, பூக்கடை செந்தில், பழஞ்சநல்லூர் பாஸ்கர் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.