பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு! புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

மீனவர்கள் போராட்டம் வாபஸ்

சிதம்பரம் அருகே தனியார் அனல்மின் நிலையத்தைக் கண்டித்து மீனவர்கள் 100 நாள்களுக்கும் மேலாக நடத்தி வந்த வேலைநிறுத்தப் போராட்டம் எம்எல்ஏ நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து முடிவுக்கு வந்தது. 

Updated On :22 அக்டோபர் 2018, 3:07 am

சிதம்பரம் அருகே தனியார் அனல்மின் நிலையத்தைக் கண்டித்து மீனவர்கள் 100 நாள்களுக்கும் மேலாக நடத்தி வந்த வேலைநிறுத்தப் போராட்டம் எம்எல்ஏ நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து முடிவுக்கு வந்தது. 
பரங்கிப்பேட்டை அருகே உள்ள கரிக்குப்பம் கிராமத்தில் தனியார் அனல்மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த அனல் மின் நிலையத்திலிருந்து வெளியேறும் கரித் துகள்கள் வீடுகளில் படிவதால் கிராம மக்கள் பாதிக்கப்பட்டனர். மேலும், அருகேயுள்ள புதுக்குப்பம் கிராமத்தில் தனியார் அனல் மின் நிலைய நிர்வாகம் சார்பில் நிலக்கரியை கையாள்வதற்காக துறைமுகம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த துறைமுகத்துக்கும் கிராம மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர். 
இதுதொடர்பாக, கடந்த ஜூலை 10-ஆம் தேதி முதல் இந்தப் பகுதி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாமல் 100 நாள்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். 
இதுகுறித்த ஆலோசனைக் கூட்டம் புதுக்குப்பத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், சிதம்பரம் தொகுதி எம்எல்ஏ கே.ஏ.பாண்டியன் பங்கேற்றார். பேச்சுவார்த்தையின் முடிவில், மீனவர்கள் போராட்டத்தைக் கைவிட்டு மீன்பிடி தொழிலுக்குச் செல்ல வேண்டும் என்றும், அவர்களுக்கு தேவையான  உதவிகளை செய்து தருவதாகவும் எம்எல்ஏ உறுதியளித்தார். இதையடுத்து  திங்கள்கிழமை முதல் மீன்பிடி தொழிலுக்குச் செல்ல மீனவர்கள் சம்மதம் தெரிவித்தனர். 
மேலும், மீன்பிடி படகுகள் கடலுக்குச் செல்ல ஏதுவாக கடற்கரை மணலை வெட்டி வகைசெய்யவும், படகுகளை தள்ளிவிடவும்  பொக்லைன் இயந்திரம் அனுப்புவதாக  எம்எல்ஏ ஒப்புக்கொண்டார். இதையடுத்து, மீனவர்களின் நீண்ட நாள் போராட்டம் முடிவுக்கு வந்தது. 
 கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், பரங்கிப்பேட்டை ஒன்றியச் செயலர் அசோகன், அவைத் தலைவர் ராசாங்கம், அம்மா பேரவை செயலர் வீராசாமி, கூட்டுறவு சங்க தலைவர்கள் தன.கோவிந்தராஜன், ஆறுமுகம், நிர்வாகிகள் ஆனந்த், முருகன், கோதண்டம், புதுக்குப்பம் கிராம நிர்வாக தலைவர் சேத்தன், துணைத் தலைவர் கந்தன், பொருளாளர் சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.