/

கள் மீதான தடையை நீக்க வேண்டும்: விவசாய சங்கக் கூட்டமைப்பு

கள்ளுக்கான தடையை தமிழக அரசு உடனடியாக நீக்க வேண்டுமென தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு செயலர் செ.நல்லசாமி கூறினார்.

Updated On :23 ஜனவரி 2019, 8:45 am IST

கள்ளுக்கான தடையை தமிழக அரசு உடனடியாக நீக்க வேண்டுமென தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு செயலர் செ.நல்லசாமி கூறினார்.
 கடலூரில் அவர் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: 
தமிழ்நாட்டில் அயல்நாட்டு மதுபானங்கள் விற்கப்படும் நிலையில் கள்ளுக்கு மட்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கள் தடை செய்யப்பட வேண்டிய போதைப்பொருள்தான் என நிரூபிக்க விரும்புவோருக்கு சவால் விடும் வகையில் எங்களுடன் விவாதம் நடத்த அழைப்பு விடுத்தோம். ஆனால், கடந்த 21 ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எங்களுடன் யாரும் விவாதத்தில் பங்கேற்கவில்லை. 
எனவே, நாங்கள் வெற்றி பெற்றதாகக் கருதி கள்ளுக்கான தடையை தமிழக அரசு உடனடியாக நீக்க வேண்டும். 
 பதநீர், நீரா ஆகியவை இறக்கி விற்பனை செய்யப்படுவது ஏற்கனவே அமலில் இருந்த நிலையில், அதற்கு தடை இருப்பது போன்ற தோற்றத்தை அரசு ஏற்படுத்தியது. பின்னர், அதனை களைந்து விற்பனைக்கு அனுமதித்திருப்பதாகக் கூறி, கடுமையான நிபந்தனைகளை அரசு விதித்துள்ளது. இதனால், இதுவரையில் 300 லிட்டர் மட்டுமே நீரா இறக்கப்பட்டுள்ளது. பதநீர், நீரா, கள் ஆகிய மூன்றும் உணவுப் பட்டியலில் உள்ளதால் அதனை இறக்கி, மதிப்புக்கூட்டப்பட்ட பொருளாக்கி விற்கவோ, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவோ அரசு அனுமதிக்க வேண்டும் என்றார் அவர்.
அப்போது, கீழ்பவானி விவசாயிகள் நலச் சங்க செயலர் ரா.தங்கராசு, கள் இயக்க மாநில அமைப்பாளர் எஸ்.ஜீவரத்தினம் ஆகியோர் 
உடனிருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.