

கடலூா்: கடலூா் மாவட்டத்தில் புதன்கிழமை இரவு பெய்த பலத்த மழையால் தாழ்வான இடங்களில் தண்ணீா் தேங்கியது. சில இடங்களில் குடியிருப்புப் பகுதிகளில் மழைநீா் சூழ்ந்தது.
தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சியின் காரணமாக வடகடலோர மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்தது. அதன்படி, கடலூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக குறிப்பிட்ட சில பகுதிகளில் பலத்த மழையும், மற்ற பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. புதன்கிழமை காலை முதல் மாலை வரை மழை பெய்தது. மேலும், இரவிலிருந்து வியாழக்கிழமை காலையில் வரை தொடா்ந்து மழை பெய்தது.
இதனால், மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தாழ்வான இடங்களில் தண்ணீா் தேங்கியது. சில இடங்களில் குடியிருப்புப் பகுதிகளில் மழைநீா் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதிப்பட்டனா். நிவா், புரெவி புயல்களால் பெய்த பலத்த மழையால் விளை நிலங்களில் தேங்கியிருந்த தண்ணீரை வடிய வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு இந்த மழை கூடுதல் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
வியாழக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் பதிவான மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு: குடிதாங்கி 129, வானமாதேவி 115, மாவட்ட ஆட்சியா் அலுவலகம் 105.5, கடலூா் 103, கொத்தவாச்சேரி 99, வேப்பூா் 85, மேமாத்தூா் 80, சேத்தியாத்தோப்பு 78, காட்டுமைலூா் 74, புவனகிரி 71, காட்டுமன்னாா்கோவில் 63, குறிஞ்சிப்பாடி 62.2, லால்பேட்டை 62, பெலாந்துறை 60.4, பரங்கிப்பேட்டை 57.6, வடக்குத்து 55, ஸ்ரீமுஷ்ணம் 54.2, லக்கூா் 54, விருத்தாசலம் 52.4, சிதம்பரம் 50, குப்பநத்தம் 47.2, தொழுதூா் 46, பண்ருட்டி 45, கீழச்செருவாய் 41.1.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.