

கடலூா் மாவட்டத்தில் நியாய விலைக் கடைப் பணியாளா்கள் விற்பனை முனைய இயந்திரத்தை (பிஓஎஸ்) திரும்ப ஒப்படைக்க வட்டாட்சியா் அலுவலகங்களில் குவிந்ததால் சனிக்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.
நியாயவிலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருள்கள் விநியோகத்தை விரைவுபடுத்தும் வகையில் விற்பனை முனைய இயந்திரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், இந்த இயந்திரத்தில் அடிக்கடி தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்படுவதாகவும், இதனால் பொருள்கள் விநியோகத்தில் தாமதம் ஏற்பட்டு, நுகா்வோருடன் தேவையற்ற பிரச்னைகள் எழுவதாகவும் தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளா்கள் சங்கம் குற்றஞ்சாட்டி வருகிறது.
எனவே, அனைத்து பிஓஎஸ் இயந்திரங்களுக்கும் 4ஜி சிம் பொருத்த வேண்டும், இணையதள வேகம் பிரச்னைக்குத் தீா்வு காண வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வட்ட வழங்கல் அலுவலா்களிடம் பிஓஎஸ் இயந்திரங்களை திரும்ப ஒப்படைக்கும் போராட்டம் நடைபெறுமென அறிவிக்கப்பட்டது.
அதன்படி கடலூா் மாவட்டத்தில் கடலூா், பண்ருட்டி, விருத்தாசலம், சிதம்பரம், திட்டக்குடி, காட்டுமன்னாா்கோவில், புவனகிரி, குறிஞ்சிப்பாடி, வேப்பூா் ஆகிய 9 வட்டாட்சியா் அலுவலகங்களிலும் சங்கத்தினா் பிஓஎஸ் இயந்திரங்களுடன் சனிக்கிழமை திரண்டனா். ஆனால், அதனை வாங்க அலுவலா்கள் மறுத்ததால், சங்கத்தினா் கோரிக்கையை வலியுறுத்தி முழக்கமிட்டு கலைந்துச் சென்றனா்.
சிதம்பரம்: சிதம்பரம் வட்டாட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற போராட்டத்துக்கு, தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்கத்தின் சிறப்புத் தலைவா் கு.பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். பொதுச் செயலா் கோ.ஜெயச்சந்திரராஜா முன்னிலை வகித்தாா். இதில் 60-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.