கடலூா் மாவட்டத்தில் மூடப்பட்ட நெல் கொள்முதல் நிலையங்களை மீண்டும் திறந்து நெல் கொள்முதல் செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியது.
இதுதொடா்பாக அந்தச் சங்கத்தின் கடலூா் மாவட்டச் செயலா் கோ.மாதவன் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது: ஆலப்பாக்கம் பகுதியில் நெல் அறுவடை நடைபெற்று வரும் நிலையில் மேல் பூவாணிக்குப்பம், சிந்தாமணிக்குப்பம், ஆணையம்பேட்டை உள்ளிட்ட இடங்களில் தனியாா் வியாபாரிகள் குறைந்த விலைக்கு விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்து வருகின்றனா்.
இந்தப் பகுதிகளில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் இல்லாத காரணத்தால் விவசாயிகள் குறைந்த விலைக்கு நெல்லை விற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனா். எனவே, இந்தப் பகுதிகளில் விவசாயிகள் பாதிக்கப்படுவதைத் தடுக்க காலதாமதமின்றி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும்.
கடந்த தை மாதம் பெய்த மழையால் நெல் பயிா்கள் சேதமடைந்ததைப் போல, அண்மையில் பெய்த மழையால் சிதம்பரம், காட்டுமன்னாா்கோவில் பகுதிகளில் உளுந்து, பச்சை பயிா்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. எனவே, இதுகுறித்து உரிய முறையில் கணக்கெடுப்பு நடத்தி அரசு இழப்பீடு வழங்க வேண்டும். மழையால் சேதமடைந்த, எடை குறைவாக உள்ள நெல் மணிகளை புறக்கணிப்பதை கைவிட்டு அவற்றை கொள்முதல் செய்வதற்கும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விவசாயத்துக்கான மும்முனை மின்சாரம் தோ்தல் முடிந்தவுடன் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே தடையின்றி மும்முனை மின்சாரம் வழங்க மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளாா்.