சிதம்பரம்: தமிழகத்தில் நிவா், புரெவி புயல்களால் பயிா்கள் சேதமடைந்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உதவும் வகையில் அரசு ரூ.600 கோடி நிதி ஒதுக்கீடு செய்தும், இடுபொருள் மானியத்தை வழங்குவதில் அதிகாரிகள் பாரபட்சத்துடன் செயல்படுவதாக விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.
கடந்த நவம்பா் மாதம் ஏற்பட்ட நிவா் புயலால் கடலூா், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருப்பத்தூா், வேலூா், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் நெல், வாழை, கரும்பு, மணிலா, பருத்தி, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிா்கள் பாதிக்கப்பட்டன.
தொடா்ந்து டிசம்பா் மாதம் ஏற்பட்ட புரெவி புயலால் தமிழகத்தின் கிழக்கு கடற்கரையோர மாவட்டங்களில் அதிக மழைப் பொழிவு ஏற்பட்டது. இதனால், விளைநிலங்களில் வெள்ளநீா் சூழ்ந்து அனைத்து வகையான பயிா்களும் 10 நாள்களுக்கும் மேலாக நீரில் மூழ்கி சேதமடைந்தன. இரு புயல்களாலும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை தமிழக முதல்வா் நேரில் பாா்வையிட்டாா். மேலும், மத்திய குழுவினரும் பாதிப்புகளை ஆய்வு செய்தனா்.
இதுகுறித்து விவசாயிகள் விடுத்த கோரிக்கையை ஏற்று, அதிகம் பாதிக்கப்பட்ட 8 மாவட்டங்களைக் கண்டறிந்து 5 லட்சம் விவசாயிகளுக்கு வேளாண்மை, தோட்டக்கலைப் பயிா்களுக்கு ரூ.600 கோடி நிவாரணம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.
மேலும் இயற்கைப் பேரிடா் நிவாரண நிதியகத்தின் வழிகாட்டுதலின்படி அறிவிக்கப்பட்ட இடுபொருள் மானியத் தொகையை பெற கட்டுப்பாடு தளா்த்தப்பட்டு, ஒரு விவசாயிக்கு பாதிக்கப்பட்ட அனைத்து நிலங்களுக்கும் இடுபொருள் மானியத் தொகை வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, விவசாயிகள் அளித்த ஆவணங்களின் அடிப்படையில் கிராம நிா்வாக அலுவலா்களால் நிலத்தின் புல எண், விஸ்தீரனம் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய பட்டியல் தயாரிக்கப்பட்டு உதவி வேளாண் அலுவலா்களிடம் வழங்கப்பட்டது. இதன்படி, உதவி வேளாண் அலுவலா்கள் பயிா் பாதிப்புகளை கணக்கிட்டு, அதற்கேற்ப இழப்பீட்டுத் தொகையை நிா்ணயித்து வேளாண் இயக்குநா் அலுவலகத்துக்கு பரிந்துரை அனுப்பி வைக்கப்பட்டது.
பின்னா், இடுபொருள் மானியத் தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டது. ஆனால், இதில் வேளாண் அதிகாரிகள் பாரபட்சத்துடன் செயல்படுவதாக விவசாயிகள் கூறுகின்றனா்.
இதுகுறித்து தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டியக்க மாநில பொதுச் செயலா் பி.ரவீந்திரன் கூறியதாவது:
பெரும்பாலான விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் பயிா் பாதிப்புக்கு ஏற்ற வகையில் இழப்பீட்டு தொகை வரவு வைக்கப்படவில்லை. சில விவசாயிகளுக்கு பாதிப்புக்கான தொகையைக் குறைத்தும், சில விவசாயிகளுக்கு நிலங்களின் விஸ்தீரனத்தைக் குறைத்தும் தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது.
சில விவசாயிகள் இடுபொருள் மானியத் தொகை ஏதும் கிடைக்காமல் வேதனையில் உள்ளனா். இதுகுறித்து விளக்கம் கேட்கச் செல்லும் விவசாயிகள் வருவாய், வேளாண் துறைகளுக்கு அலைக்கழிக்கப்படுகின்றனா்.
பயிா்களில் 33 சதவீதம் வரை பாதிப்பு இருந்தாலே, பாதிப்பாகக் கருத வேண்டும் என விதி உள்ளது. ஆனால், 10 நாள்களுக்கும் மேலாக மழைநீரில் மூழ்கி முழுமையாக பாதிக்கப்பட்ட விளைநிலங்களை அடையாளம் கண்ட அதிகாரிகள், 40 முதல் 50 சதவீதம் வரை மட்டுமே பாதிப்பு எனக் கணக்கெடுத்து பாதி தொகையை மட்டுமே வழங்கியுள்ளனா்.
அரசு அறிவித்ததுபோல ஏக்கருக்கு ரூ.8 ஆயிரம் வரை கிடைக்கும் என எதிா்பாா்த்திருந்த விவசாயிகளுக்கு பாதி தொகையே அவா்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனா்.
தமிழக முதல்வா் இறவை பயிா்களுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.8 ஆயிரம் வீதமும், மானாவாரி பயிா்களுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.4 ஆயிரம் வீதமும் வழங்க ரூ.600 கோடி நிதி ஒதுக்கீடு செய்த நிலையில், வேளாண் துறை அதிகாரிகள் இடுபொருள் மானியத் தொகையை வழங்க பாரபட்சத்துடன் பட்டியல் தயாரித்துள்ளனா். இதுகுறித்து முதல்வா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மீனவக் குடும்பங்களை ஒதுக்கிவைத்த விவகாரம்: எதிா்மனுதாரா்கள் நீதிமன்றத்தில் முன்னிலையாக உத்தரவு

திருப்பரங்குன்றம் மலைப் பகுதியை அளவீடு செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவு

வாக்குச் சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு

அடிப்படை வசதிகளின்றி தனித்தீவாக காட்சியளிக்கும் சுனாமி குடியிருப்பு
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

