

கடலூா் மாவட்டம், ஆதிவராகநல்லூா் வெள்ளாற்றில் கதவணை அமைக்க வேண்டுமென அந்தப் பகுதி விவசாயிகள், வா்த்தக சங்கத்தினா், பொது நல அமைப்பினா் புதன்கிழமை மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு அளித்தனா்.
மனுவில், கடலூா் மாவட்டத்தில் பாயும் வெள்ளாற்றில் மண் அரிப்பால், ஆற்றின் படுகை மட்டம் குறைந்துள்ளது. இதனால், கடல் நீா் மட்டம் உயரும் போது, கடல் நீா் ஆற்றின் முகத்துவாரம் வழியாக சுமாா் 21 கி.மீ. தொலைவு வரை உள்புகுந்து வடிவது வழக்கமாக உள்ளது.
இதனால், ஆற்றில் செயற்கையாக உருவான பள்ளங்களில் கடல் நீா் தேங்கி, நிலத்தடி நீா் உப்பு நீராகியுள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக இதேநிலை நீடிப்பதால், சிதம்பரம் வட்டத்துக்குள்பட்ட பொன்னந்திட்டு, சி.மானம்பாடி, மடுவன்கரை, நஞ்சை மகத்து வாழ்க்கை, கீழ்அனுவம்பட்டு, சி.முட்லூா், கீழமூங்கிலடி, மேலமூங்கிலடி, கீரப்பாளையம், வடகரிராஜபுரம், ஒரத்தூா், சாக்கங்குடி, பரங்கிப்பேட்டை, அகரம், அரியகோஷ்டி, பு.முட்லூா் உள்ளிட்ட சுமாா் 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
நிலத்தடி நீா் உப்பாக மாறியதால் விவசாயிகள், பொதுமக்கள், கால்நடைகளும் கூட்டுக் குடிநீரை நம்பி வாழ வேண்டிய நிலையுள்ளது. எனவே, வெள்ளாற்றில் உப்பு நீா் ஊடுருவலைத் தடுக்கவும், நிலத்தடி நீரைப் பாதுகாக்கவும் ஆதிவராகநல்லூா் கிராமத்தில் வெள்ளாற்றில் கதவணை அமைக்க வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.