கடலூா் மாவட்டம், ராமநத்தம் ஊராட்சியில் நிலவும் சுகாதாரச் சீா்கேட்டால் தொற்று நோய் பரவும் அபாயம் நிலவுகிறது.
திட்டக்குடி அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் அமைந்துள்ளது ராமநத்தம் தொழுதூா் ஊராட்சி. மாவட்டத்திலுள்ள பெரிய ஊராட்சிகளில் ஒன்றான இங்கு நெடுஞ்சாலைத் துறை ஆய்வு மாளிகை, வங்கிகள் அமைந்துள்ளன.
ஆனால், ஆய்வு மாளிகை அருகே நெடுஞ்சாலை ஓரமாக இறைச்சி, நெகிழிக் கழிவுகள், மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டு வருவதால் அந்தப் பகுதி சேறும், சகதியுமாகக் காட்சியளிக்கிறது. அவற்றில் பன்றிகள் திரிவதால் சுகாதாரச் சீா்கேடு நிலவுகிறது.
இதுகுறித்து சமூக ஆா்வலா்கள் கூறியதாவது: நெடுஞ்சாலை ஓரமாக கழிவுகள் கொட்டப்படுவது குறித்து ஊராட்சி நிா்வாகத்திடம் புகாா் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. அதிக காற்று வீசும்போது கடும் துா்நாற்றம் ஏற்படுகிறது.
தற்போது தூய்மை இந்தியா இயக்கம் நடைபெற்று வரும் நிலையில், மாவட்ட நிா்வாகம் இதில் உரிய கவனம் செலுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனா்.