திமுக ஆட்சி துலாக்கோல் போன்றது: அமைச்சர் சேகர்பாபு

திமுக ஆட்சி துலாக்கோல் போன்றது. அனைவருக்கும் சமமான நீதி வழங்கும் ஆட்சி  இது என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
திமுக ஆட்சி துலாக்கோல் போன்றது: அமைச்சர் சேகர்பாபு

சிதம்பரம்: திமுக ஆட்சி துலாக்கோல் போன்றது. அனைவருக்கும் சமமான நீதி வழங்கும் ஆட்சி  இது. நடராஜர் கோயிலில் பாரம்பரியம் மாறாமல் அதே நேரத்தில் இறையன்பர்களுக்கு உண்டான சாமி தரிசனம் செய்ய எந்தவித பாதகம் ஏற்படாமல் இருக்கவும், இறைவனுக்கும், பக்தர்களுக்கும், தீட்சிதர்களுக்கும் ஒரு பாலமாக இருந்து அனைத்து பிரச்னைகளுக்கு முடிவு ஏற்படுத்தப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு திங்கள்கிழமை காலை 7 மணிக்கு வருகை தந்தார். அவரை திமுக நகரச் செயலாளர் கே.ஆர்.செந்தில்குமார், பொதுக்குழு உறுப்பினர் த.ஜேம்ஸ் விஜயராகவன், மாவட்ட பொறியாளர் அணி செயலாளர் அப்பு சந்திரசேகரன், ரா.வெங்கடேசன், துணை செயலாளர் பாலசுப்பிரமணியன், நகர அவைத் தலைவர் ராஜராஜன், மாவட்ட பிரதிநிதி வி.என்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி மற்றும் கடலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் ஜெமினி எம்.என்.ராதா மற்றும் நிர்வாகிகள் மாலை அணிவித்து வரவேற்றார். 

பின்னர் கோயில் பொதுதீட்சிதர்கள் கிழக்கு கோபுர வாயிலில் அமைச்சரை வரவேற்று கோயிலுக்குள் அழைத்துச் சென்றனர். பின்னர் அமைச்சர் சேகர்பாபு சட்டையை கழற்றி கனகசபை மீது ஏறி சித்சபையில் வீற்றுள்ள சிவகாமசுந்தரி சமேத நடராஜப் பெருமானை தரிசனம் செய்தார். பொதுதீட்சிதர்கள் சிறப்பு அர்ச்சனை, ஆராதனை செய்து அமைச்சருக்கு பிரசாதம் வழங்கினர். அடுத்து அமைச்சர் சேகர்பாபு தில்லை கோவிந்தராஜப் பெருமாள் கோயிலுக்கு சென்று சாமி தரிசனர்.

சாமி தரிசனம் செய்து விட்டு திரும்பிய அமைச்சர் சேகர்பாபு, ஆயிரங்கால் மண்டபம் முன்பு உள்ள நடனப் பந்தலில் தரையில் அமர்ந்து கோயில் பொதுதீட்சிதர்களுடன் கலந்துரையாடினார். அமைச்சருடன் இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கண்ணன், இணை ஆணையர் அசோக்குமார், துணை ஆணையர் ஜோதி, உதவி ஆணையர் சந்திரன், கோட்டாட்சியர் கே.ரவி உள்ளிட்டோர் கலந்துரையாடலுடன் பங்கேற்றனர். 

அப்போது தீட்சிதர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்தனர். அரசு தரப்பு நடவடிக்கை குறித்து அமைச்சர் தீட்சிதர்களிடம் தெரிவித்தார். பின்னர் அமைச்சர் தெரிவிக்கையில், கோயிலில் மகிழ்ச்சியாக சாமி தரிசனம்  செய்ததாகவும், தீட்சிசர்கள் தரப்பில் அவர்களுக்கு நிலைப்பாடுகளை தெரிவித்தனர். அரசு தரப்பு நிலைப்பாடுகளை அவர்களிடம் தெரிவித்தேன். விரைவில் சமூக தீர்வு ஏற்படும் என்றார்.

பின்னர் கிழக்கு கோபுர வாயிலில் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்தேன். தீட்சிதர்கள் மகிழ்ச்சியோடு அனைத்து  சன்னதிகளுக்கு அழைத்துச் சென்றனர். பெருமாள் சன்னதி உள்பட அனைத்து  சந்நிதிகளிலும் திவ்ய தரிசனத்தை கண்டேன். மேலும் மன மகிழ்ச்சியோடு கோயில் வளாகத்தில் அமர்ந்து தீட்சிதர்களின் நிலைப்பாட்டையும், அரசு நிலைப்பாடு குறித்தும் பகிர்ந்து கொண்டோம். 

அடுத்தடுத்த வருகின்ற நிகழ்வுகள் தீட்சிதர்கள், இறையன்பர்கள், அதே நேரத்தில் அரசுக்குட்பட்ட சட்ட திட்டங்கள், இந்து சமய அறநிலையத்துறை சட்ட திட்டங்கள் யாருக்கும் சில மனக்கஷ்டங்கள் இல்லாமல் செயல்படுத்தப்படும். அனைவரும் இன்புற்று வாழ்வதுதான் தமிழக அரசின் நிலைபாடு. நல்லதொரு சுமூகமான முடிவு ஏற்படும் நிலை  ஏற்பட்டுள்ளது. சுமூகமான நிலையில் பிரச்னைகளை நடராஜர் தீர்த்துவைப்பார். மக்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என எங்களுக்கு  முதல்வர் ஸ்டாலின் கட்டளை பிறப்பித்துள்ளார். 

அனைவருக்கும் மன திருப்தி அளிக்கும் வகையில் முடிவுகள் இருக்கும். தில்லை கோவிந்தராஜப்பெருமாள் திருப்பணி குறித்து தீட்சிதர்களிடம் ஆலோசித்து கும்பாபிஷேகம் நடைபெறுவதற்கான அனைத்து உதவிகளையும், சமரசப் பேச்சுகளிலும் தமிழக முதல்வர் உத்தரவு பெற்று இந்து சமய அறநிலையத்துறை ஈடுபட்டு செயல்படுத்தும்.

இந்த ஆட்சி துலாக்கோல் போன்றது. அனைவருக்கும் சமமான நீதி வழங்கும் ஆட்சி  இது. பாரம்பரியம் மாறாமல் அதே நேரத்தில் இறையன்பர்களுக்கு உண்டான சாமி தரிசனம் செய்ய எந்தவித பாதகம்  ஏற்படாமல் இருக்கவும், இறைவனுக்கும், பக்தர்களுக்கும், தீட்சிதர்களுக்கும் ஒரு பாலமாக இருந்து அனைத்து பிரச்சனைகளுக்கு முடிவு ஏற்படுத்தப்படும்.

திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு  180-க்கும் மேற்பட்ட திருக்கோயில்களில் திருப்பணி நடைபெற்று கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் தான்   ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் 12959 திருக்கோயில்களுக்கு ஏற்கனவே ஒரு லட்சம் ரூபாய் வைப்பு நிதி இருந்ததை, ரூ.2 லட்சமாக உயர்த்தி, அந்த வட்டியின்  மூலம் ஒரு கால திட்டத்தில் தீபங்கள் ஏற்ற முதல் கட்டமாக 129.59 கோடியை அரசின் பணத்தை ஒதுக்கி முதல்வர் செயல்படுத்தியுள்ளார். 

இந்த ஆண்டு மானிய கோரிக்கையில் மேலும் 2 ஆயிரம் கோயில்கள் ஒரு கால பூஜை திட்டத்திற்கு ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் பணியாற்றும் அர்ச்சகர்களுக்கு நலத்தை கருத்தில் கொண்டு மாதம் ரூ.1000 வங்கி  கணக்கில் செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.  10109  அர்ச்சகர்களுக்கு ரூ.1000 மாதம் வங்கியில் செலுத்தப்படுகிறது. கிராமப்புற திருக்கோயில்களுக்கு ஒரு ஆண்டுக்கு ஆயிரம் திருக்கோயில்கள் என்று, ரூ.1 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டதை, முதல்வர் ஸ்டாலின் ரூ.2 லட்சமாக உயர்த்தி ஒதுக்கீடு செய்தார். 

இந்த ஆண்டு மட்டும் சுமார் 1500 திருக்கோயில்கள் ஆயிரம் கோடி  செலவில் திருப்பணிகள் மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார். இந்த ஆட்சியை பொறுத்தவரை ஆத்திகர்கள், நாத்திகர்கள் ஒரு சேர்ந்த ஆட்சி. இதுதான் திராவிட மாடல் ஆட்சி. நடராஜர் கோயில் தீட்சிதர்கள் எங்கள் மீது அன்பு வைத்திருக்கிறார்கள். இந்த ஆட்சி வருவதற்கு அவர்களும் பல்வேறு வகையில் உதவியாக இருந்துள்ளார்கள். அனைவரையும் சமமாக கருதும் முதல்வர் ஸ்டாலின்  அரசு யாருக்கும் நீதியை மறுப்பதற்குண்டான இந்து சமய அறநிலையத்துறையாக இருக்காது. தமிழகஅரசும் இருக்காது என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com