சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு திங்கள்கிழமை காலை வருகை தந்த குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் சாமி தரிசனம் செய்தார்.
குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் புதுச்சேரியிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் திங்கள்கிழமை காலை சிதம்பரம் அண்ணாமலைநகர் விமானத்தளத்தில் வந்து இறங்கினார். குடியரசு துணைத் தலைவரை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், கடலூர் மாவட்ட ஆட்சியர் அ.அருண்தம்புராஜ் , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர். ராஜாராம், பேரூராட்சி தலைவர் கே.பழனி உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றநர்.
பின்னர் பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், மனைவியுடன் காலை 9.50 மணிக்கு சென்றார். கீழசன்னதி கோபுர வாயிலில் பொதுதீட்சிதர்களின் செயலாளர் டி.எஸ். சிவராம தீட்சிதர் தலைமையில் தீட்சிதர்கள் கும்ப மரியாதை அளித்து மேளதாளத்துடன் கோயிலுக்குள் அழைத்துச் சென்றனர். பின்னர் அவர் மேல்சட்டையை கழற்றி விட்டு கனகசபை மீது ஏறி சித்சபையில் வீற்றுள்ள சிவகாமசுந்தரி சமேத நடராஜப் பெருமானை தரிசித்தார்.
தீட்சிதர்கள் சிறப்பு அர்ச்சனை, தீபாராதனை செய்து குடியரசு துணைத் தலைவருக்கு பொன்னாடை அணிவித்து பிரசாதத்தை வழங்கினர். பின்னர் கோயிலிலிருந்து புறப்பட்ட குடியரசு துணைத் தலைவர் சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டையில் பாபாஜி கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அதன் பினனர் மீண்டும் அண்ணாமலை நகருக்கு வருகை தந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு சென்றார்.
கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதி மறுப்பு: திங்கள்கிழமை சிதம்பரத்திற்கு குடியரசு துணைத் தலைவர் வருகையையொட்டி கோயில் நான்கு கோபுர வாயில் வழியாக காலை 7 மணிக்கு முதல் பக்தர்கள் செல்ல காவல்துறையினர் அனுமதி மறுத்ததால் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகியினர். வெளியூரிலிருந்து வந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். தமிழ்நாடு வடக்கு மண்டல ஐஜி கண்ணன் தலைமையில், 1500-க்கும்த்துக்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். கீழசன்னதி பகுதியில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டது. மேலும் கோயிலுக்கு செல்ல பத்திரிக்கையாளர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டது.
கடும் போக்குவரத்து நெருக்கடி: குடியரசு துணைத் தலைவர் வருகையையொட்டி கோயில் வீதிகளில் வாகனங்கள் செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து நகரில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. சிதம்பரம் நகர பகுதியில் பயிலும் பள்ளி, கல்லூரி, மாணவ மாணவிகள் போக்குவரத்து நெருக்கடியால் கடும் அவதிக்குள்ளாகினர். குடியரசு துணைத் தலைவர் காலை 9.50 மணிக்கு தான் கோயிலுக்கு வருகை தந்தார். ஆனால் காலை 8 மணி முதல் வீதிகளில் போக்குவரத்து வாகனங்கள் நிறுத்தப்பட்டதால், மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். பல்வேறு இடங்களில் போக்குவரத்து தடை செய்யப்பட்டதால் மாணவர்கள் அவதி அடைந்தனர்.