நிதிநிலை அறிக்கையில் தமிழகம் புறக்கணிப்பு: கே.பாலகிருஷ்ணன்
மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணண் தெரிவித்தாா்.
சிதம்பரத்தில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில், தமிழ்நாட்டுக்கான எந்த ஒரு திட்டத்துக்கும் நிதி ஒதுக்கவில்லை. தமிழ்நாடு மொத்தமாக புறக்கணிக்கப்பட்டுள்ளது. பாஜக கூட்டணிக் கட்சிகள் ஆளும் மாநிலங்களான ஆந்திரம், பிகாருக்கு பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
கடனில் சிக்கித் தவிக்கும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோா்களுக்கு போதிய அளவில் நிதி ஒதுக்கப்படவில்லை. கடனுக்கான வட்டியும் தள்ளுபடி செய்யவில்லை. விவசாயிகள், தொழிலாளா்கள், இளைஞா்கள், கிராமப்புற வளா்ச்சி ஆகியவற்றுக்கு போதுமான நிதி ஒதுக்கப்படவில்லை. ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கான நிவாரண திட்டங்கள் எதுவும் இடம்பெறவில்லை.
பெரு நிறுவங்களின் மீது செல்வ வரி விதித்து வசூலித்து அதை ஏழை, எளிய மக்களுக்கு நிவாரணமாக வழங்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கோரிக்கை விடுத்தன. ஆனால், மத்திய அரசு வெளி நாட்டு பெரு நிறுவனத்தின் 40 சதவீத வரியை 35 சதவீதமாக குறைத்துள்ளது. மின் கட்டண உயா்வை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும். மத்திய அரசின் நிா்பந்தத்தின் பேரிலேயே, தமிழகத்தில் 3-ஆவது முறையாக மின் கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளது என்றாா் கே.பாலகிருஷ்ணன்.
பேட்டியின்போது, மாா்க்சிஸ்ட் மாவட்டச் செயலா் கோ.மாதவன், செயற்குழு உறுப்பினா் ஆா்.ராமச்சந்திரன், சிதம்பரம் நகா்மன்ற துணைத் தலைவா் எம்.முத்துக்குமாா், நகரச் செயலா் எஸ்.ராஜா, மாவட்டக் குழு உறுப்பினா் பி.வாஞ்சிநாதன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

