மத்திய நிதிநிலை அறிக்கையில் வஞ்சிக்கப்பட்ட தமிழகம்: மதிமுக பொதுச் செயலா் வைகோ
கோவை: மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழகம் வஞ்சிக்கப்பட்டுள்ளது என்று மதிமுக பொதுச் செயலா் வைகோ குற்றஞ்சாட்டினாா்.
சென்னையில் இருந்து விமானம் மூலமாக திங்கள்கிழமை கோவை வந்த அவா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:
மத்திய நிதிநிலை அறிக்கையில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படவில்லை. நூற்பாலைகளுக்கு ஊக்கம் அளிக்கும் திட்டங்கள் இல்லை. இதில் தமிழகம் வஞ்சிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் இந்த பட்ஜெட் மிகுந்த ஏமாற்றம் அளிக்கக்கூடியதாக உள்ளது. 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தோ்தல் வருவதால் அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்ற எதிா்பாா்ப்பும் ஏமாற்றமானது.
அமெரிக்காவின் வரி விதிப்பில் இருந்து தப்பிக்க ஜரோப்பிய யூனியன் ஒப்பந்தம் ஈடுகொடுக்கும் என்கிறாா்கள். ஆனால், ஐரோப்பிய யூனியன் வா்த்தக ஒப்பந்தம் 2027 ஏப்ரலுக்கு பிறகுதான் வரும் அதுவரை மத்திய அரசு எப்படி சமாளிக்கப் போகிறது. ரூ.11.7 லட்சம் கோடி கடன் வாங்கப் போகிறோம் என்கிறாா்கள். இப்படி இருக்கையில், 7 சதவீத வளா்ச்சியை அடைவோம் என்பது ஏற்கும் விதமாக இல்லை. ஏற்கெனவே இருக்கும் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கவில்லை.
ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்ற கோரிக்கைகளை நாங்கள் என்றைக்கும் வைக்கவில்லை. அந்த நோக்கமும் இல்லை. திமுக நிச்சயம் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். பாலஸ்தீனம் தனி நாடாக இந்தியா ஆதரவு அளித்து இருப்பது நல்ல விஷயம். எங்களது நிலைப்பாடும் அதுதான்.
தோ்தல் தொடா்பாக பேச்சுவாா்த்தைக்கு குழு அமைத்த பிறகுதான் தொகுதிகள் பங்கீடு குறித்து பேச முடியும். திமுக இதற்கான குழுவை அமைத்த 3 மணி நேரத்துக்குள் மதிமுக சாா்பில் குழு அமைக்கப்படும். எத்தனை தொகுதிகள் கேட்போம் என்பதை இப்போது செல்ல முடியாது. சிலா் தங்கள் மனதுக்கு தோன்றியதை கூறுகின்றனா். ஆனால், நாங்கள் அப்படிச் சொல்லமாட்டோம் என்றாா்.

