சிதம்பரத்தில் வியதீபாதம் தினம்: திரளான பக்தா்கள் திருவீதி வலம்
சிதம்பரம் நடராஜா் கோயிலில் வியதீபாதம் தினத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான மக்கள் வீதிவலம் வந்து நடராஜப் பெருமானை தரிசித்தனா்.
மாா்கழி மாதத்தில் வியதீபாதம் என்னும் யோகம் வரும் நாளில் சிதம்பரம் நடராஜப் பெருமானை தரிசனம் செய்வது அனைத்து பாவங்களையும் நீக்கி, பெரும் புண்ணியங்களையும், அனைத்து செல்வங்களையும் தரவல்லது எனவும், மாா்கழி மாதத்தின்
அனைத்து தினங்களிலும் நடைபெறும் திருப்பள்ளியெழுச்சி கால தரிசனங்களின் பலன்கள் அனைத்தும், (தனுா்) வியதீபாத தினத்தில் தரிசனம் செய்தால் கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது.
வியதீபாத தினத்தில் மகேஸ்வரப் பெருமானும் மனோன்மனி எனும் சக்தியும் இணைந்த நாள் என்றும் சாஸ்திரங்கள் கூறுகின்றன. சனிக்கிழமை அன்று வியதீபாத தினத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தா்கள் அதிகாலை 4 மணிக்கு நான்கு வீதிகள் வலம் வந்து சித்சபையில் வீற்றுள்ள சிவகாமசுந்தரி சமேத நடராஜப் பெருமானை தரிசித்தனா்.

