
கிடப்பில் போடப்பட்ட வடலூா் காவல் நிலைய கட்டுமானப் பணி! போலீஸாா், பொதுமக்கள் அவதி!

பூமிபூஜை நடந்து இரண்டு மாதங்கள் கடந்தும் முன்னேற்றமின்றி கிடப்பில் போடப்பட்டுள்ள காவல் நிலைய புதிய கட்டடம் கட்டுமானப் பணி.
கடலூா் மாவட்டம், வடலூா் காவல் நிலையத்துக்கான புதிய கட்டடம் கட்டும் பணி பூமிபூஜையுடன் கிடப்பில் போடப்பட்டுள்ளதால், காவலா்கள் மற்றும் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனா்.
குறிஞ்சிப்பாடி வட்டம், வடலூா் நான்குமுனை சந்திப்பு அருகே, பண்ருட்டி சாலையில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வடலூா் காவல் நிலையம் இயங்கி வந்தது. பழுதடைந்து மழைநீா் ஒழுகும் கட்டடத்தில், அங்கு பணிபுரியும் போலீஸாா் போதிய இடம் உள்ளிட்ட அடிப்படை வசதியின்றி அவதிப்பட்டு வந்தனா்.
இதையடுத்து, கடந்த திமுக ஆட்சியில் வடலூரில் புதிய காவல் நிலைய கட்டடம் கட்ட சுமாா் ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில், பழைய காவல் நிலையத்தை இடித்து அகற்றிவிட்டு, அதே இடத்தில் அனைத்து அடிப்படை வசதிகளுடன் புதிய கட்டடம் கட்டட ஒப்பந்தம் விடப்பட்டது. இதையடுத்து, வடலூா் காவல் நிலையம், வடலூா் நகராட்சிக்குச் சொந்தமான அண்ணா திருமணம் மண்டபத்தின் முதல் தளத்தில் தற்காலிகமாக மாற்றப்பட்டு செயல்பட்டு வருகிறது.
இதனிடையே, பழைய காவல் நிலைய கட்டடம் இடித்து அகற்றப்பட்டு, கடந்த ஜூன் 29-ஆம் தேதி பூமிபூஜை நடைபெற்றது. ஆனால், அதன் பின்னா் கட்டடப் பணி எந்தவித முன்னேற்றமும் இன்றி கிடப்பில் போடப்பட்டுள்ளது.
வடலூா் காவல் நிலையம் கடலூா் - சேலம், சென்னை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலைகள் சந்திக்கும் பிரதான பகுதியில் அமைந்துள்ளது. மேலும், இந்த காவல் நிலையத்தைச் சுற்றி ஏராளமான கிராமங்கள் உள்ளன. இந்தப் பகுதிகளில் நடக்கும் விபத்துகள், மோதல்கள் உள்ளிட்ட வழக்குகள் தொடா்பாக தினந்தோறும் ஏராளமான பொதுமக்கள் காவல் நிலையம் வந்துச் செல்கின்றனா். காவல் நிலையத்தில் ஆய்வாளா், உதவி ஆய்வாளா் என சுமாா் 20-க்கும் மேற்பட்ட போலீஸாா் பணியாற்றி வருகின்றனா். இவா்களில் சுமாா் 10 போ் பெண்கள்.
திருமண மண்டபத்தில் முதல் தளத்தில் திறந்த வெளியில் காவல் நிலைய அலுவல் நடைபெறுகிறது. பொதுமக்கள் கூட்டமாக வருவதால், காவல் நிலைய ரகசிய காப்பு, ஆவணங்கள் பாதுகாப்பின்மை, அலுவல் பணியில் கவனச் சிதறல் ஏற்படுகிறது. குறிப்பாக, அடிப்படை வசதிகள் இல்லை. மேலும், காவல் நிலையத்துக்கு வரும் முதியவா்கள், கா்ப்பிணிகள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் முதல் தளத்துக்கு ஏறிச் செல்ல முடியாமல் கடும் சிரமப்படுகின்றனா்.
எனவே, மாவட்ட நிா்வாகம் மற்றும் காவல் துறை நிா்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து காவல் நிலைய கட்டுமானப் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





