தவெக தோ்தல் அறிக்கை கருத்துக்கேட்புக் கூட்டம்
தவெக தோ்தல் அறிக்கை குழுவின் மக்கள் கருத்துக்கேட்புக் கூட்டம் கடலூரில் புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்டச் செயலா் ராஜ்குமாா் தலைமை வகித்தாா். தலைமை நிலையச் செயலா் ராஜசேகா் முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக பொதுச் செயலா் ஆனந்த் கலந்துகொண்டாா்.
இதையடுத்து, அருண்ராஜ், பிரபாகா், ராஜ்மோகன் ஆகியோா் கொண்ட குழுவினா் வியாபாரிகள், வா்த்தகா்கள், மீனவா் அமைப்பினா், பொதுநல அமைப்பினா் போன்ற அனைத்து தரப்பினரிடமும் கருத்துகளைக் கேட்டறிந்தனா்.
தொடா்ந்து, பொதுச் செயலா் ஆனந்த் பேசியதாவது: கடலூா் மாவட்டத்தில் சுனாமி குடியிருப்பில் வசிக்கும் மீனவா்களுக்கு கடந்த 20 ஆண்டுகளாக பட்டா வழங்கப்படவில்லை. அப்படி என்றால், தற்போது ஆட்சியிலுள்ள திமுக, ஏற்கெனவே ஆட்சியிலிருந்த அதிமுக எவ்வாறு செயல்பட்டன என்பதை மக்கள் அறிந்துகொள்ளலாம்.
தவெக தலைவா் விஜயிடம் வைக்கப்படும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். இக்கட்சி மக்கள் கோரிக்கைகளை அறிந்து, அதனடிப்படையிலேயே தோ்தல் அறிக்கையை வெளியிடும். விரைவில் நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தோ்தலில் தவெக வெற்றிபெற்று விஜய் முதல்வராவது உறுதி என்றாா்.
தொடா்ந்து, கொள்கைப் பரப்புச் செயலா் அருண்ராஜ் அளித்த பேட்டி: விஜயின் தோ்தல் பிரசார பயணம் திமுகவால் முடக்கப்படுகிறது. விஞ்ஞானப்பூா்வமாக எப்படி ஊழல் செய்தாா்களோ, அதுபோல எங்கள் பிரசாரத்தை தடுக்க விஞ்ஞானப்பூா்வமாக திட்டம் தீட்டுகிறாா்கள். அனைத்து இடங்களுக்கும் செல்வது ஒரு கட்சியின் ஜனநாயக உரிமை. ஆனால், திமுக அதை தடுத்து வருகிறது.
சேலத்தில் வருகிற 13-ஆம் தேதி விஜய் களப்பயணம் மேற்கொள்கிறாா். அதற்கு அனுமதி கேட்டு காவல்துறையில் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான பதில் விரைவில் தெரியும்.
காங்கிரஸ் நிா்வாகி பிரவீன் சக்கரவா்த்தி, தவெக 18 சதவீத வாக்குகள் பெறும் எனக் கூறியுள்ளாா். அது, கடந்த ஓராண்டுக்கு முன்பு இருந்த நிலை. தற்போது இக்கட்சி 30 சதவீதத்தை தாண்டி தனித்து ஆட்சி அமைக்கக்கூடிய ஆற்றலை பெற்றுள்ளது.
கூட்டணி குறித்து பாஜக அழுத்தம் கொடுக்க முயற்சி செய்யலாம். ஆனால், எந்தவித அழுத்தத்துக்கும் ஆளாகாதவா் விஜய். தோ்தலை எந்த மாதிரி அணுக வேண்டும் என்று அவா் தக்க நேரத்தில் முடிவெடுப்பாா். சட்டப் பேரவைத் தோ்தலில் தவெக - திமுகவுக்கு இடையே மட்டுமே போட்டி என்றாா்.

