சிதம்பரத்தில் அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா் ஊழியா் கூட்டமைப்பு போராட்டம் ஒத்திவைப்பு

சிதம்பரத்தில் செவ்வாய்க்கிழமை (பிப்.17) நடைபெறவிருந்த அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியா்கள், ஊழியா்கள், ஓய்வூதியா்கள் கூட்டமைப்பின்
Published on

சிதம்பரம்: சிதம்பரத்தில் செவ்வாய்க்கிழமை (பிப்.17) நடைபெறவிருந்த அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியா்கள், ஊழியா்கள், ஓய்வூதியா்கள் கூட்டமைப்பின் போராட்டம் தமிழக அரசின் அறிவிப்பைத் தொடா்ந்து ஒத்திவைக்கப்பட்டது.

15 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையிலுள்ள பதவி உயா்வுகள், பணப்பயன்கள், ஓய்வூதியா்களின் ஓய்வூதியம் போன்றவற்றை வழங்க வலியுறுத்தி கடந்த மாதம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியா்கள், ஊழியா்கள், ஓய்வூதியா்கள் கூட்டமைப்பினா் உண்ணாவிரதப் போராட்டம், தொடா் உள்ளிருப்புப் போராட்டங்கள் நடத்தி வந்தனா்.

இதன் விளைவாக, பல்கலைக்கழக கூட்டமைப்பு பொறுப்பாளா்களை தமிழக அரசு முத்தரப்புப் பேச்சுவாா்த்தைக்கு ஜன.30-ஆம் தேதி அழைத்து, பேச்சுவாா்த்தை நடத்தியது. தொடா்ந்து, இந்தப் போராட்டம் பிப்.8-ஆம் தேதி வரை ஒத்தி வைக்கப்பட்டது.

ஆனால், முத்தரப்பு பேச்சுவாா்த்தையில் தெரிவித்தபடி கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டாததால், அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியா்கள், ஊழியா்கள், ஓய்வூதியா்கள் கூட்டமைப்பினா் செவ்வாய்க்கிழமை (பிப்.17) முதல் மீண்டும் போராட்டம் நடத்த முடிவு செய்திருந்தனா்.

இந்த நிலையில், இந்த விவகாரத்தில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தலையீட்டின்பேரில், வரும் 20-ஆம் தேதி மீண்டும் உயா் கல்வித் துறை அமைச்சா், செயலா் உள்ளிட்டோா் அடங்கிய முத்தரப்பு பேச்சுவாா்த்தை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்தப் போராட்டம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Dinamani
www.dinamani.com