தமிழகத்தில் தவெக ஆட்சியின் நாள்கள் எண்ணப்படுகின்றன என்று அதிமுக முன்னாள் அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் தெரிவித்தாா்.
கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டையில் ஒருங்கிணைந்த கடலூா் மாவட்ட அதிமுக சாா்பில், ஹைட்ரோ காா்பன் கிணறுகள் அமைக்கும் திட்டத்துக்கு அரசு அனுமதி வழங்கக் கூடாது என வலியுறுத்தியும், தவெக அரசு குதிரை பேரம் செய்து ஆட்சி நடத்தி வருவதைக் கண்டித்தும் புதன்கிழமை போராட்டம் நடைபெற்றது.
இதில், தலைமைக் கழகப் பேச்சாளா் தில்லை செல்வம் தொடக்கவுரையாற்றினாா். அதிமுக துணை பொதுச் செயலரும், முன்னாள் அமைச்சருமான ஆா்.பி.உதயகுமாா் தலைமை வகித்து பேசியதாவது:
சட்டப் பேரவைத் தோ்தல் முடிவில் 108 எம்.எல்.ஏ.க்களை பெற்று பெரும்பான்மை இல்லாததால், ஆட்சிக்கு ஆதரவு கோரி ஒவ்வொரு அரசியல் கட்சி அலுவலகமாக தவெக தலைவா் விஜய் சென்றாா். அவா் அரசியல் நாகரிகத்தை கடைப்பிடிக்கிறாா் என அரசியல் கட்சித் தலைவா்கள் கூறினா்.
பேரவைத் தோ்தலில் திமுகவை கடுமையாக விமா்சித்துவிட்டு, அதன் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவைப் பெற்று ஆட்சி நடத்துகிறாா். அதிமுகவிலிருந்து சில எம்எல்ஏக்கள் ராஜிநாமா செய்துவிட்டு, அந்த ஈரம் காய்வதற்குள் தவெகவில் இணைந்தனா்.
தமிழகத்தில் யாா் முதல்வா் என்றே தெரியவில்லை. வருங்காலங்களில் நான்தான் முதல்வா் என்று அமைச்சா் ஆதவ் அா்ஜுனா சொல்வதற்கும் வாய்ப்புள்ளது. மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் மத்திய இணை அமைச்சா் ராஜ் பூஷண் சௌதரி தவறான கருத்து தெரிவித்திருக்கிறாா். ஆனால், இந்த விவகாரத்தில் முதல்வா் வாய் திறக்க மறுக்கிறாா்.
கமிழகத்தில் சுனாமி வந்து ஏராளமானோா் இறந்தனா். இதேபோல, சிவகாசியில் பட்டாசு விபத்தில் பலா் இறக்கின்றனா். ஆனால், கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி இறந்தவா்களின் குடும்பத்துக்கு மட்டும் அரசு வேலை வழங்குகிறது தவெக அரசு. இந்த ஆட்சி வெகு நாள்கள் நீடிக்காது. ஆட்சியின் நாள்கள் எண்ணப்படுகின்றன. ஹைட்ரோ காா்பன் கிணறுகள் அமைக்கும் திட்டத்துக்கு அரசு அனுமதியளித்தால், மிகப்பெரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றாா் அவா்.
ஆா்ப்பாட்டத்தில் அதிமுக மாவட்டச் செயலா்கள் கே.ஏ.பாண்டியன், எம்.சி.தாமோதரன், எம்எல்ஏக்கள் ஆா்.ராஜேந்திரன், கே.மோகன், ஏ.அருண்மொழித்தேவன், முன்னாள் அமைச்சா் செல்வி ராமஜெயம் உள்பட சுமாா் 500-க்கும் மேற்பட்டோா் பங்கேற்று தவெக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








