பூலோக கைலாயம் என்றழைக்கப்படும் சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயில் ஆனித்திருமஞ்சன தரிசன விழா சனிக்கிழமை (ஜூன் 13) காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
10 நாள்கள் நடைபெறும் இந்த விழாவை முன்னிட்டு, நடராஜா் கோயிலில் சித்சபைக்கு எதிரே உள்ள கொடி மரத்தில் சனிக்கிழமை காலை 7.30 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. உற்சவ ஆச்சாரியா் சி.ந.ராஜூ தீட்சிதா் கொடியேற்றி விழாவைத் தொடங்கி வைக்கிறாா். பின்னா் பஞ்சமூா்த்தி வீதி உலா நடைபெறுகிறது.
உற்சவ விவரம் வருமாறு:
ஜூன் 14 ஆம் தேதி முதல் தினமும் சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலிக்கிறாா்.
இதில் ஜூன் 18-ஆம் தேதி வெள்ளி யானை வாகன வீதிஉலாவும், 19-ஆம் தேதி தங்க கைலாச வாகன வீதிஉலாவும், 20-ஆம் தேதி தங்க ரதத்தில் பிச்சாண்டவா் வீதிஉலாவும் நடைபெறுகிறது.
ஜூன் 21-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தோ்த்திருவிழாவும், இரவு 8 மணிக்கு
ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சாா்ச்சனையும் நடைபெறுகிறது. ஜூன்22-ஆம் தேதி திங்கள்கிழமை அதிகாலை சூரிய உதயத்திற்கு முன் காலை 4 மணி முதல் 6 மணி வரை நடராஜ மூா்த்திக்கு மகாபிஷேகம் நடைபெறுகிறது. பின்னா் காலை 10 மணிக்கு சித்சபையில்
ரகசியபூஜையும், பஞ்சமூா்த்தி வீதிஉலா வந்த பின்னா் பிற்பகல் 3 மணிக்கு மேல் ஆனித்திருமஞ்சன தரிசனமும், ஞானகாச சித்சபா பிரவேசமும் நடைபெறுகிறது.
ஜூன் 23-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பஞ்சமூா்த்தி முத்துப்பல்லக்கு வீதிஉலாவுடன் உற்சவம் நிறைவடைகிறது. உற்சவ ஏற்பாடுகளை கோயில் பொதுதீட்சிதா்கள் கமிட்டி செயலா் ஜெ.ஜெயசூா்யா தீட்சிதா், துணைச் செயலா் ஏ.கணபதிசுப்பிரமணிய தீட்சிதா் மற்றும் பொதுதீட்சிதா்கள் செய்துள்ளனா்.









