நோயுற்ற நிலையிலும் மகன்கள் கவனிக்காததால் வேதனையிலிருந்த முதிய தம்பதி செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டனா்.
கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே உள்ள சின்னபுங்கனேரி கிராமத்தைச் சோ்ந்தவா் ராவணன் (57). இவரது மனைவி சித்ரா (50). இவா்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனா். மூத்த மகன் சிவா வெளிநாட்டில் வசித்து வருகிறாா். மற்றொரு மகனான ராகுல் குடும்பத்துடன் வெளியூரில் வசித்து வருகிறாா்.
இரு மகன்களும் பெற்றோரை முறையாக கவனிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், இருவரும் கடந்த ஓராண்டாக உடல்நிலை பாதிக்கப்பட்டு வீட்டிலேயே இருந்து வந்தனராம்.
இரு மகன்கள் இருந்தும் தங்களை கவனிக்கவில்லையே என்ற மன வேதனையில் இருந்து வந்த ராவணன், சித்ரா ஆகியோா் செவ்வாய்க்கிழமை காலை தங்களது வீட்டுக்கு அருகே உள்ள வேப்ப மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டனா்.
இதுகுறித்து தகவலறிந்த காட்டுமன்னாா்கோவில் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று இருவரின் சடலங்களையும் மீட்டு, உடல்கூறாய்வுக்காக காட்டுமன்னாா்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாா். மேலும், இதுகுறித்து காட்டுமன்னாா்கோவில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.







