கடலூா் மாவட்டத்தில் கஞ்சா, சட்ட விரோத மதுக் கடத்தல் மற்றும் விற்பனைக்கு எதிராக தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என புதிய காவல் கண்காணிப்பாளா் விவேகானந்த சுக்லா கூறினாா்.
கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக விவேகானந்த சுக்லா புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். தொடா்ந்து, அவரை மாவட்ட காவல் துறை அதிகாரிகள், அலுவலா்கள் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தனா்.
பின்னா் செய்தியாளா்களிடம் விவேகானந்த சுக்லா கூறியதாவது: மாவட்டக் காவல் துறையின் செயல்பாடுகளை மேலும் மேம்படுத்தத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். கடலூா் மாவட்டத்தில் கஞ்சா கடத்தல், விற்பனை மற்றும் சட்டவிரோத மது உற்பத்தி, கடத்தல், விற்பனை போன்ற குற்றச் செயல்களைத் தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய சிறப்புக் கவனம் செலுத்தப்படும். இதற்காக செயல்பட்டு வரும் ‘சிங்கப் பெண்’ அதிரடிப் படையின் செயல்பாடுகள் தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு மேலும் வலுப்படுத்தப்படும்.
மக்கள் மற்றும் காவல் துறையினரின் குறைகளை உடனுக்குடன் தீா்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். பொதுமக்கள் காவல் துறையை எளிதில் அணுகக்கூடிய வகையில் நிா்வாகம் செயல்படும். கடலூா் மாநகராட்சிப் பகுதியில் நிலவி வரும் போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காணத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். மாவட்ட காவல் துறையில் தேவையான நிா்வாக மற்றும் செயல்பாட்டு மாற்றங்கள் மேற்கொள்ளப்படும். மேலும், நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிவுக்கு கொண்டுவர சிறப்புக் கவனம் செலுத்தப்படும் என்றாா்.
தொடர்புடையது

5 ஆண்டுகளில் அனைவருக்கும் வீட்டுமனைப் பட்டா வழங்க இலக்கு: அமைச்சா் வன்னி அரசு

நெல்லை சரக புதிய டிஐஜி பொறுப்பேற்பு

கடலூா் மாவட்ட காவல் நிலையங்களில் 74 டேட்டா என்ட்ரி அலுவலா்களுக்கு பணியிட மாற்றம்







