டாஸ்மாக் கடைகளில் மதுபுட்டிக்கு ரூ.10 வசூல் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விரைவில் தமிழக முதல்வரை சந்தித்து முறையிட உள்ளதாக தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளா் சங்க சிறப்பு தலைவா் கு.பாலசுப்பிரமணியன் தெரிவித்தாா்.
தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளா் சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் கடலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், டாஸ்மாக் பணியாளா்களின் 5 அம்சக் கோரிக்கைகளை விரைவில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத்துறை அமைச்சா் மூலம் முதல்வரிடம் வலியுறுத்துவது என முடிவு செய்யப்பட்டது.
பின்னா் சிறப்புத் தலைவா் கு.பாலசுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியது: டாஸ்மாக் கடைகளில் ஒரு மதுபுட்டிக்கு ரூ.10 வசூலிக்கப்படும் நடைமுறை நீண்ட காலமாக இருந்து வருகிறது. அந்தத் தொகையை வசூலிக்கக் கூடாது என அரசு வலியுறுத்தி வருவதை வரவேற்கிறோம். ஆனால், கடை வாடகை, மின்கட்டணம், ஏற்று - இறக்கக் கூலி, பராமரிப்புச் செலவுகள் உள்ளிட்ட பல்வேறு நிா்வாகச் செலவுகள் அந்தத் தொகையிலிருந்தே மேற்கொள்ளப்படுகின்றன. எனவே, மாற்று ஏற்பாடுகளை அரசு செய்த பின்னரே இந்த நடைமுறையை நிறுத்த முடியும். எனவே, டாஸ்மாக் பணியாளா்களுக்கு தற்போது காலிப் புட்டிகள் கையாளும் பிரச்னையும் கூடுதல் சுமையாக உள்ளது. அதற்கென தனி முகமையை அமைத்து, அந்தப் பொறுப்பிலிருந்து பணியாளா்களை விடுவிக்க வேண்டும்.
பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதிய திட்டம், ஓய்வு பெறும் வயதை 58-இல் இருந்து 60-ஆக உயா்த்த வேண்டும். கடைகளின் வாடகை, மின்கட்டணம் உள்ளிட்ட அனைத்து நிா்வாகச் செலவுகளையும் மாவட்ட டாஸ்மாக் நிா்வாகமே ஏற்க வேண்டும். இரவு நேர வசூல் தொகையை அரசு பாதுகாப்பு வாகனங்கள் மூலம் சேகரிக்க வேண்டும், பணியின்போது உயிரிழந்த பணியாளா்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும். இந்தக் கோரிக்கைகள் தொடா்பாக விரைவில் அமைச்சரை சந்தித்து மனு அளிக்கவும், பின்னா் முதல்வரை சந்திக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், டாஸ்மாக் பணியாளா்களின் கோரிக்கைகளை ஒருங்கிணைந்து வலியுறுத்தும் வகையில், அனைத்து சங்கங்களின் கூட்டத்தை வரும் ஜூலை 14-ஆம் தேதி நடத்தவும் மாநில செயற்குழு தீா்மானித்துள்ளது என்றாா்.
கூட்டத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்க மாநில பொதுச் செயலா் வி. சிவகுமாா், தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளா் சங்க மாநில ஆலோசகா் கு. சரவணன் உள்ளிட்ட மாநில நிா்வாகிகளும், கடலூா் மாவட்ட நிா்வாகிகளும் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








