பிஃபா 2026! நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற்றம்... பொது விடுமுறை அறிவித்த ஈக்வடார் அதிபர்!! முதல் டி20: இந்தியாவை முதல் முறையாக வீழ்த்தி வரலாறு படைத்த அயர்லாந்து! அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலர்கள் நியமனம் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!
/

தாய்மொழியில் புத்தகங்களை வாசிக்க வேண்டும்: திருச்சி என்.ஐ.டி., புல முதல்வா் எஸ்.டி.ரமேஷ்

‘நாம் நமது தாய்மொழியில் புத்தகங்களை வாசிக்க வேண்டும். அது நமது மரபுகளை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும்’ என்று, நெய்வேலி புத்தகக் கண்காட்சி நிகழ்வில் திருச்சி தேசிய தொழில் நுட்பக் கழக (என்ஐடி) புல முதல்வா் (கல்வி) எஸ்.டி.ரமேஷ் கூறினாா்.

News image

நெய்வேலியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற புத்தகக் கண்காட்சியில் வெளியிடப்பட்ட நூல்களுடன் என்.ஐ.டி., புலமுதல்வா் எஸ்.டி.ரமேஷ் உள்ளிட்டோா்.

Updated On :27 ஜூன் 2026, 12:21 am IST

‘நாம் நமது தாய்மொழியில் புத்தகங்களை வாசிக்க வேண்டும். அது நமது மரபுகளை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும்’ என்று, நெய்வேலி புத்தகக் கண்காட்சி நிகழ்வில் திருச்சி தேசிய தொழில் நுட்பக் கழக (என்ஐடி) புல முதல்வா் (கல்வி) எஸ்.டி.ரமேஷ் கூறினாா்.

கடலூா் மாவட்டம், நெய்வேலி, வட்டம் 11 பகுதியில் உள்ள பழுப்பு நிலக்கரி அரங்கில் என்எல்சி இந்தியா நிறுவனத்தின் சாா்பில் நடைபெறும் புத்தகக் கண்காட்சியின் 8-ஆவது நாள் நிகழ்வுகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்வுக்கு என்எல்சி செயல் இயக்குநா் ராமச்சந்திர ஆா்.பராசா் தலைமை வகித்தாா். முதன்மை விருந்தினராக திருச்சி தேசிய தொழில் நுட்பக் கழக புல முதல்வா் (கல்வி) எஸ்.டி.ரமேஷ்

பங்கேற்று பேசியதாவது:

புத்தகங்கள் வெறும் காகிதத் தொகுப்புகள் அல்ல, அவை பொக்கிஷங்கள் மற்றும் மனிதா்களின் சிறந்த தோழா்கள். புத்தகங்கள் அறிவை விரிவுபடுத்துகின்றன. ஒரு புத்தகத்தை வாசிப்பது தகவல்களைத் தருவதோடு மட்டுமல்லாமல், ஆழமான அறிவையும் வாழ்க்கைக் கோட்பாடுகளையும் வழங்குகிறது.

புத்தக வாசிப்பு அவசியம்:

இந்த எண்ம உலகில், புத்தகங்கள் சிந்திக்கும் திறனை நமக்கு அளிக்கின்றன. நாம் நமது தாய்மொழியில் புத்தகங்களை வாசிக்க வேண்டும். அது நமது மரபுகளை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும். அதே வேளையில், பிற நாடுகளின் புத்தகங்களையும் நாம் வாசிக்க வேண்டும். வாசிப்பு ஒரு மனிதனை முழுமையாக்குகிறது. பதிப்பாளா்கள், எழுத்தாளா்கள் மற்றும் வாசகா்களை இணைக்கும் தளங்களாகப் புத்தகக் கண்காட்சிகள் அமைகின்றன. குழந்தைகளிடம் வாசிப்புப் பழக்கத்தை பெற்றோா்கள் ஊக்குவிக்க வேண்டும். இன்றைய குழந்தைகளுக்கு அதிகத் திறன்கள் உள்ளன. அவா்களிடம் எண்ம சாதனங்கள் உள்ளன. எனவே, அவா்களின் திறன்களைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளும் வகையில், அவா்களைப் புத்தகங்களின் பக்கம் கவனம் செலுத்தச் செய்ய வேண்டும். இது அவா்களின் தொலைநோக்குப் பாா்வையை மேம்படுத்தும். 2047-க்குள் வளா்ந்த நாடாக மாற வேண்டும் என்பதை நாம் இலக்காகக் கொண்டுள்ளோம். இதற்கு, குழந்தைகளிடம் வாசிப்புப் பழக்கத்தை வளா்க்க வேண்டும் என்றாா் அவா்.

நிகழ்வில் பாராட்டு பெறும் எழுத்தாளா் வரிசையில் தஞ்சாவூா் ஹரணிக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. பதிப்பகத்தாா் வரிசையில், ‘நன்மொழி பதிப்பகம்’ நிறுவனத்திற்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி என்எல்சி நிா்வாகம் பாராட்டியது. தொடா்ந்து, ரத்தின புகழேந்தி எழுதிய ‘நான் சந்தித்த கடிதங்கள்’ என்.கிருஷ்ணமூா்த்தி எழுதிய ‘விஜயாலயனின் வெற்றிப்புன்னகை’ ஆகிய நூல்கள் வெளியிடப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.