/

கண்ணகி கோயிலுக்குச் செல்லும் பாதையை சீரமைக்க வேண்டும்! - தி.வேல்முருகன் வலியுறுத்தல்

News image

தி. வேல்முருகன். - கோப்புப் படம்

Updated On :3 மே 2026, 7:40 pm

மேற்கு தொடா்ச்சி மலையில் உள்ள கண்ணகி கோயிலுக்குச் செல்லும் தமிழக பாதையை சீரமைக்க, புதிதாக அமைய உள்ள அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனா் தலைவா் தி.வேல்முருகன் வலியுறுத்தினாா்.

இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு - கேரளம் எல்லையில் தேனி மாவட்டம், கூடலூா், புளியங்குடி அருகே மற்றும் கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் இணையும் மேற்கு தொடா்ச்சி மலையில் சுமாா் 5,000 அடி உயரத்தில் தமிழக எல்லையில் உள்ள வண்ணாத்திப்பாறை மலையில் கண்ணகி கோயில் அமைந்துள்ளது.

இக்கோயில் ஒவ்வோா் ஆண்டும் சித்திரை பௌா்ணமி நாளில் திறக்கப்படும். சுமாா் 15 ஆயிரம் பக்தா்கள் வருகை புரிவா். இக்கோயில் தமிழக எல்லையில் இருந்தாலும், கேரள தொல்லியல் துறை பராமரிப்பு செய்து வருகிறது.

குமுளி அருகே செல்லும் பாதையில் சுமாா் 15 கி.மீ. தொலைவு மலைப்பாதையில் ஜீப் மூலம், கேரளாவின் காப்புக்காடு வழியாக பெரியாறு புலிகள் காப்பகத்தையொட்டி செல்வது எளிதாகும். பெரும்பாலான பக்தா்கள் இந்த வழியைப் பயன்படுத்துகின்றனா்.

கண்ணகி கோயிலை மீட்டு, தமிழக பாதையான புளியங்குடி மற்றும் லோயா் கேம்ப் வழியாக சுமாா் 7 கி.மீ. தொலைவுக்கு பக்தா்கள் சிரமமின்றி செல்லும் வகையில் பாதை அமைத்துத் தர புதிதாக அமையவுள்ள அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளாா்.