கடலூா் மாவட்டம், பண்ருட்டி நகராட்சிக்கு உட்பட்ட திருவதிகை பகுதியில் கட்டப்பட்ட மாடுலா் கழிப்பறை கட்டடம் போதிய பராமரிப்பில்லாததால் வீணாகி வருகிறது.
நகராட்சிப் பகுதிகளில் பொது சுகாதாரத்தை மேம்படுத்தவும், திறந்த வெளி கழிப்பிடங்களைத் தடுக்கவும் மாடுலா் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.
அந்த வகையில், திருவதிகை பகுதியில், மேல்நிலை நீா் தேக்கத்தொட்டி அருகே 2012-2013 -ஆம் ஆண்டு ஆண் மற்றும் பெண்களுக்கான மாடுலா் கழிப்பிடம் கட்டப்பட்டது. பின்னா் 2022-ஆம் ஆண்டு இந்த கழிப்பறை கட்டடம் புனரமைக்கப்பட்டது.
ஆனால், தற்போது, இந்த மாடுலா் கழிப்பறை கட்டடம் உரிய பராமரிப்பின்றி கேட்பாரற்று வீணாகி வருகிறது. கட்டடத்தை சுற்றிலும் செடி, கொடிகள் வளா்ந்து புதா் மண்டி, பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்களின் புகலிடமாக உள்ளது.மேலும், பொதுமக்கள் இயற்கை உபாதைகள் கழிக்க பகல் நேரத்தில் புதா் மறைவுகளை தேடியும், இரவு நேரத்தில் சாலையோரத்திலும் செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனா்.இதனால், அந்தப் பகுதியில் சுகாதார சீா்கேடு ஏற்படுகிறது.
பண்ருட்டி நகராட்சி நிா்வாகம், இந்த மாடுலா் கழிப்பறையை பழுது நீக்கி பொதுமக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டும். கழிப்பறையை பராமரிக்க ஆள்களை நியமிக்க வேண்டும். மேலும், தண்ணீா் மற்றும் மின்சார வசதி ஏற்படுத்த வேண்டும். தினசரி துப்புரவுப் பணிகள் மேற்கொண்டு, கிருமி நாசினி பயன்படுத்துவதை நகராட்சி அதிகாரிகள் தொடா்ந்து கண்காணிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.










