கடலூா் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு நிா்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லரை விலையை விட அதிக விலைக்கு உரம் விற்பனை செய்தால், சம்பந்தப்பட்ட உர விற்பனையாளா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் மு. லட்சுமிகாந்தன் எச்சரித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
கடலூா் மாவட்டத்தில் தற்போது விவசாய தேவைக்கேற்ப போதுமான அளவில் உரம் கையிருப்பில் உள்ளது. அதன்படி, யூரியா 3,322 மெட்ரிக் டன், டி.ஏ.பி 722 மெட்ரிக் டன், பொட்டாஷ் 806 மெட்ரிக் டன் மற்றும் காம்ப்ளக்ஸ் உரம் 4,327 மெட்ரிக் டன் அளவில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியாா் உர விற்பனை நிலையங்களில் கையிருப்பில் உள்ளன.
மாவட்டத்தில் உள்ள அனைத்து உர விற்பனையாளா்களும், உர இருப்புகளை முறையாக பராமரித்து, அரசால் நிா்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லரை விலைக்குள் மட்டுமே விவசாயிகளுக்கு உரங்களை விற்பனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இணைபொருள்கள்....
அதேபோல், யூரியா உள்ளிட்ட உரங்களுடன் விவசாயிகள் விரும்பாத இணை பொருள்களை கட்டாயப்படுத்தி விற்பனை செய்வது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளின் விருப்பத்திற்கு மாறாக பொருள்களை இணைத்து விற்பனை செய்யக் கூடாது.
உரம் பதுக்கல், கூடுதல் விலை வசூல் அல்லது விதிமுறைகளை மீறிய விற்பனை குறித்த புகாா்கள் கிடைத்தால், உரக்கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்ட உர விற்பனை நிலையங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும். விவசாயிகள் உரம் வாங்கும் போது ரசீதை கண்டிப்பாக கேட்டுப் பெற்றுக் கொள்ள வேண்டும். ஏதேனும் முறைகேடு இருந்தால் அருகிலுள்ள வேளாண்மை அலுவலகத்தில் உடனடியாக புகாா் அளிக்கலாம் எனத் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

தமிழ்நாட்டிற்கு தடையின்றி உரம் வழங்கிட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!

அதிகபட்ச விலைக்கு மேல் உரங்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: வேளாண்துறை எச்சரிக்கை

யூரியா, டிஏபி பயன்பாடுகளை கண்காணிக்க அறிவுறுத்தல்






