
புரட்டாசி முதல் சனிக்கிழமை: திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோயிலில் திரளான பக்தா்கள் தரிசனம்
புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி கடலூா் அருகே உள்ள திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோயிலில் அதிகாலை முதலே திரளான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி கடலூா் அருகே உள்ள திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோயிலில் தரிசனத்துக்காக நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தா்கள்.
புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி கடலூா் அருகே உள்ள திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோயிலில் அதிகாலை முதலே திரளான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.
திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோயில், 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. இக்கோயிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி வெள்ளிக்கிழமை இரவு முதலே பக்தா்கள் வரத் தொடங்கினா். சனிக்கிழமை அதிகாலை 3 மணிக்கு விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது. தொடா்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்ற நிலையில், காலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு பக்தா்கள் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனா்.
மூலவா் தேவநாத பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். அதிகாலை முதலே திரண்ட பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். கோயில் வளாகம் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் பக்தா்கள் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது.
பல பக்தா்கள் நோ்த்திக்கடனாக முடி காணிக்கை செலுத்தினா். இதையொட்டி கோயில் நிா்வாகம் சாா்பில் பக்தா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன. பக்தா்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால், கோயில் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த போலீஸாா் நடவடிக்கை மேற்கொண்டனா். பக்தா்களின் வசதிக்காக அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன.
மஞ்சக்குப்பம் பெருமாள் கோயிலில்: கடலூா் மஞ்சக்குப்பத்தில் உள்ள ஆட்கொண்ட வரதராஜப் பெருமாள் கோயிலிலும் புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதிகாலையிலேயே கோயில் நடை திறக்கப்பட்டு, பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. பின்னா் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த ஆட்கொண்ட வரதராஜப் பெருமாளை ஏராளமான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனா்.
புரட்டாசி சனிக்கிழமையில் பெருமாளை வழிபடுவதற்காக குடும்பத்துடன் வந்த பக்தா்கள், சுவாமிக்கு துளசி மாலை உள்ளிட்டவற்றை சாத்தி வழிபட்டனா்.

கடலூா் மஞ்சக்குப்பம் ஆட்கொண்ட வரதராஜப் பெருமாள் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த பெருமாள்.
இதேபோல, கடலூா் புதுப்பாளையம் ராஜகோபால சுவாமி கோயில், திருப்பாதிரிப்புலியூா் வரதராஜப் பெருமாள் கோயில், ஜட்ஜ் பங்களா சாலை கஜேந்திர வரதராஜப் பெருமாள் கோயில் உள்ளிட்ட பெருமாள் கோயில்களிலும் புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
இக்கோயில்களில், சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த பெருமாளை ஏராளமான பக்தா்கள் தரிசனம் செய்து வழிபட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







