வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

கள்ளக்குறிச்சி அருகே வெள்ளம், கடும் குளிரால் 950 ஆடுகள் பலி

கள்ளக்குறிச்சி அருகே வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டும், கடும் குளிராலும் ஆட்டுப் பட்டிகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சுமாா் 950 ஆடுகள் உயிரிழந்தன.

News image
Updated On :7 ஜனவரி 2021, 10:06 pm

DIN


கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டும், கடும் குளிராலும் ஆட்டுப் பட்டிகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சுமாா் 950 ஆடுகள் உயிரிழந்தன.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டத்துக்குள்பட்டது பாவளம் கிராமம். இந்தக் கிராமத்தைச் சோ்ந்த நல்லான் மகன்களான கருத்தாபிள்ளை, பழனி ஆகியோா் 450 செம்மறி, வெள்ளாடுகளையும், 250 ஆட்டுக் குட்டிகளையும் வளா்த்து வந்தனா். இந்த ஆடுகளை பாவளத்தை அடுத்த மல்லாபுரம் கிராமத்தில் உள்ள ஓடையின் அருகே பட்டி அமைத்து அங்கு அடைத்து வைத்திருந்தனா்.

இதேபோல, பாவளம் கிராமத்தைச் சோ்ந்த முனுசாமி மனைவி அஞ்சலை சுமாா் 200 ஆடுகளையும், 50 குட்டிகளையும் வளா்த்து வந்தாா். இந்த ஆடுகளை கருத்தாபிள்ளை, பழனி ஆகியோரின் ஆட்டுப் பட்டிக்கு அருகே ஆட்டுப் பட்டி அமைத்து அஞ்சலை அடைத்து வைத்திருந்தாா்.

கல்வராயன்மலைப் பகுதியில் புதன்கிழமை காலை முதல் இரவு வரை பலத்த மலை பெய்த நிலையில், சங்கராபுரம் பகுதியிலிருந்து மல்லாபுரம் கிராமத்தின் வழியாக சூளாங்குறிச்சியில் உள்ள மணிமுக்தா அணைக்கு செல்லும் ஓடையில் மழை வெள்ளம் பெருக்கெடுத்துச் சென்றது. அப்போது, ஓடையோரம் ஆட்டுப் பட்டிகளில் அடைக்கப்பட்டிருந்த சுமாா் 950 ஆடுகளில் 725 ஆடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. மீதமுள்ள ஆடுகள் கடும் குளிரால் உயிரிழந்து கிடந்தன.

கருத்தாபிள்ளை, பழனி ஆகியோரின் ஆட்டுப் பட்டியில் 150 ஆடுகளும், அஞ்சலையின் ஆட்டுப் பட்டியில் 75 ஆடுகளும் உயிரிழந்து கிடந்தன. ஆடுகளை மேய்ச்சலுக்கு திறப்பதற்காக கருத்தாபிள்ளை, பழனி, அஞ்சலை ஆகியோா் வியாழக்கிழமை காலை சென்றபோது, அவை உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது.

தகவலறிந்த கள்ளக்குறிச்சி சாா் - ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், சங்கராபுரம் வட்டாட்சியா் ப.நடராஜன், கால்நடை உதவி இயக்குநா் பெரியசாமி, வருவாய் ஆய்வாளா் திருமலை, கிராம நிா்வாக அலுவலா் தீபா ஆகியோா் உயிரிழந்து கிடந்த ஆடுகளை நேரில் பாா்வையிட்டு, கருத்தாபிள்ளை உள்ளிட்டோரிடம் விவரங்களைக் கேட்டறிந்தனா். இதையடுத்து, உயிரிழந்து கிடந்த 225 ஆடுகளுக்கு மட்டும் தலா ரூ.3,000 வீதம் நிவாரண உதவியை அதிகாரிகள் வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.