20 ஆண்டுகள் காத்திருப்பு! - ஃபரூக் அப்துல்லாவை கொல்ல முயன்ற நபர் வாக்குமூலம்!
ஜம்மு - காஷ்மீரின் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா மீதான கொலை முயற்சி குறித்து குற்றம்சாட்டப்பட்ட நபர் வாக்குமூலம்...


ஜம்மு - காஷ்மீரின் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லாவை கொல்ல வேண்டுமென 20 ஆண்டுகளாகக் காத்திருப்பதாக, அவரைக் கொலை செய்ய முயன்று கைதான நபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஜம்மு - காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லாவின் தந்தையும், முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லா, கடந்த புதன்கிழமை (மார்ச் 11) இரவு ஜம்முவில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
அப்போது, அந்த நிகழ்வில் கலந்துகொண்ட கமால் சிங் ஜாம்வால் (வயது 63) எனும் நபர் ஃபரூக் அப்துல்லாவின் பின்னாலிருந்து அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். உடனடியாக, அங்கிருந்த பாதுகாவலர்கள் அவரை மடக்கிப் பிடித்தனர். இதனால், ஃபரூக் அப்துல்லா நல்வாய்ப்பாக உயிர்தப்பினார்.
இதனைத் தொடர்ந்து, ஜம்முவின் பூரணி மண்டி பகுதியைச் சேர்ந்த கமால் சிங் ஜாம்வாலை கைது செய்த காவல் துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், ஃபரூக் அப்துல்லாவை கொலை செய்ய வேண்டுமென கடந்த 20 ஆண்டுகளாகவே காத்திருப்பதாகவும், இன்றுதான் அதற்கான வாய்ப்பு கிடைத்ததாகவும், கமால் சிங் ஜாம்வால் கூறியுள்ளார்.
இத்துடன், இந்தக் கொலை முயற்சிக்கான காரணம் குறித்து கேட்டப்போது, எனக்கு எனது சொந்தம் நோக்கம் இருக்கிறது என்று கூறிய அவர் முழுமையான காரணத்தைத் தெரிவிக்க மறுத்துவிட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா மீதான கொலை முயற்சி பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ள நிலையில், இந்தத் தாக்குதலுக்கு நாட்டின் பல்வேறு முக்கிய தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...