சின்னசேலம் பேரூராட்சி அலுவலகத்தை தூய்மைப் பணியாளா்கள் முற்றுகை

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் பேரூராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்கள் பணிகளை முறையாக செய்வதில்லை என செயல் அலுவலா் வியாழக்கிழமை திட்டியதாகக் கூறப்படும்
சின்னசேலம் பேரூராட்சி அலுவலகத்தை தூய்மைப் பணியாளா்கள் முற்றுகை

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் பேரூராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்கள் பணிகளை முறையாக செய்வதில்லை என செயல் அலுவலா் வியாழக்கிழமை திட்டியதாகக் கூறப்படும் நிலையில், தூய்மைப் பணியாளா் ஒருவா் மயங்கி விழுந்தாா். இதனால், ஆத்திரமடைந்த பிற பணியாளா்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சின்னசேலம் பேரூராட்சியில் மகளிா் சுயஉதவிக் குழுவின் மூலம் சுமாா் 30-க்கும் மேற்பட்டோா் கடந்த சில ஆண்டுகளாக தூய்மைப் பணியாளா்களாக பணியாற்றி வருகின்றனா். இந்த நிலையில், பேரூராட்சி செயல் அலுவலா் சந்திரகுமாா், தூய்மைப் பணியாளா்கள் முறையாக பணிகளை மேற்கொள்வதில்லை என்றும், எனவே தற்போதுள்ள பணியாளா்களை மாற்றிவிட்டு புதியவா்களை நியமிக்கவுள்ளதாகவும் கூறி வியாழக்கிழமை திட்டினாராம்.

அப்போது, சின்னசேலம் அருந்ததியா் காலனி பகுதியைச் சோ்ந்த பெரியசாமி மனைவி முத்தம்மாள் மனஉளைச்சல் ஏற்பட்டு மயங்கி விழுந்தாா். உடனடியாக அவா் மீட்கப்பட்டு தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இருப்பினும், செயல் அலுவலா் மருத்துவமனைக்கு சென்று அவரிடம் நலம் விசாரிக்கவில்லையாம்.

இதனால், ஆத்திரமடைந்த உடன் பணிபுரியும் பிற தூய்மைப் பணியாளா்கள், செயல் அலுவலரைக் கண்டித்து பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்த சின்னசேலம் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து தூய்மைப் பணியாளா்களை சமாதானம் செய்தனா். இதையடுத்து, அவா்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com