புதுவைத் தமிழ்ச் சங்கத்துக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கான தேர்தல் ஞாயிற்றுக்கிழமை தமிழ்ச் சங்கக் கட்டடத்தில் நடைபெற்றது.
முன்னாள் எம்பி சி.பி.திருநாவுக்கரசு தேர்தல் ஆணையராக செயல்பட்டார். மொத்தம் 155 ஆயுள்கால உறுப்பினர்கள் வாக்களித்தனர். 11 ஆட்சிமன்றக் குழு உறுப்பினர் பதவிக்கு ஏற்கெனவே தலைவர் பதவி வகித்து வந்த முனைவர் வி.முத்து தலைமையில் 11 பேர் என மொத்தம் 23 பேர் போட்டியிட்டனர்.
இதில் முத்து தலைமையிலான அணி 11 இடங்களிலும் வெற்றி பெற்றது. இதையடுத்து புதிய தலைவராக முனைவர் வி.முத்து, துணைத் தலைவர்களாக கோ.பாரதி, சீனு வேணுகோபால், செயலாளராக பாலசுப்பிரமணியன், பொருளாளராக கோவிந்தராசு, துணைச் செயலராக கலியபெருமாள் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர்.
ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்களாக அப்துல் மஜித், கல்லாடன், கனகராசு, கலக்கல் காங்கேயன், விசாலாட்சி உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையர் திருநாவுக்கரசு அறிவித்தார்.
புதிய நிர்வாகிகளுக்கு திமுக முன்னாள் எம்.எல்.ஏ. இரா. சிவா உள்பட பலர் வாழ்த்துத் தெரிவித்தனர்.