புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சிக் கழக ஊழியர்களின் 5 நாள்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தால் சுமார் ரூ.25 லட்சம் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
புதுவை அரசின் சார்பு நிறுவனமான சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் (பி.டி.டி.சி.) கீழ் நோனாங்குப்பம் சுண்ணாம்பாற்றில் படகு குழாம் இயங்கி வருகிறது. அதே பகுதியில் தனியார் படகுத்துறை அமைப்பதற்கு அரசு அனுமதி வழங்கியது. இதைக் கண்டித்தும், ரத்து செய்ய வலியுறுத்தியும் பி.டி.டி.சி. ஊழியர்கள் கடந்த
25-ஆம் தேதி முதல் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்து நடத்தி வருகின்றனர்.
ஆனாலும், கடந்த 27-ஆம் தேதி தனியார் படகு குழாம் திறக்கப்பட்டது. அப்போது மறியலில் ஈடுபட்ட பி.டி.டி.சி. ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். திறப்பு விழா நடத்தப்பட்டாலும் தனியார் படகு குழாம் செயல்படவில்லை. அதேநேரத்தில் திறக்கப்பட்ட தனியார் படகு குழாமை மூட வலியுறுத்தி பி.டி.டி.சி. ஊழியர்கள் படகு குழாம் முன் ஞாயிற்றுக்கிழமை தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், புதுச்சேரிக்கு வந்த சுற்றுலா பயணிகள் நோனாங்குப்பம் படகு குழாமில் சவாரி செய்ய முடியாமல் திரும்பிச் சென்றனர். இந்த 5 நாள் போராட்டத்தில் ரூ.25 லட்சம் வரை பி.டி.டி.சி.யின் வருமானம் இழந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அடுத்த மாதம் சம்பளம் கிடைக்குமா? என்ற நிலையும் ஏற்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.