புதுவை மாநிலத்தில் பொது இடங்களில் விளம்பரப் பதாகைகளை வைக்க தடை விதிக்க வேண்டும் என்று மக்கள் வாழ்வுரிமை இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அந்த இயக்கத்தின் செயலாளர் கோ. அ. ஜெகன்நாதன் வெளியிட்ட அறிக்கை:
புதுவை மாநில அரசு கடந்த 2009, பிப்ரவரி மாதம் விளம்பரப் பதாகைகள், கட்-அவுட்கள், பிளக்ஸ் பேனர்கள் உள்ளிட்டவற்றை வைக்கக்கூடாது என அரசாணை வெளியிட்டது.
ஆனால், ஆட்சியாளர்களும், அரசியல் கட்சியினரும் சில பொதுநல அமைப்புகளும் மேற்கண்ட தடை சட்டத்தை மதிக்காமல், பொது மக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக சாலைகளை ஆக்கிரமித்து விளம்பரப் பதாகைகளை வைத்துள்ளனர்.
இந்த நிலையில், தமிழகத்தில் விதிமுறைகள், சட்டத்தை மீறி வைக்கப்படும் டிஜிட்டல் பேனர்களுக்கு தடைவிதிக்க வேண்டும் என, 2006-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட விளம்பரப் பதாகை தடைச் சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என கடந்த 19-ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு புதுவைக்கும் பொருந்தும் என்பதால், புதுவை அரசு 2009-ஆம் ஆண்டு கொண்டு வந்த சட்டத்தின்படி, டிஜிட்டல் பேனர்கள், கட்-அவுட்கள், பிளக்ஸ் பேனர்கள் போன்றவற்றை பொதுஇடங்களில் வைக்க தடை விதிக்க
வேண்டும்.
வரும் புத்தாண்டு முதல் இந்த உத்தரவை புதுவை அரசு அமல்படுத்தவும், புதுச்சேரியின் அழகை பாதுகாத்திடவும், விபத்தில்லா புதுச்சேரியை உருவாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.






