ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு! தங்கம் விலை குறைவு ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் தேர்வு! மானாமதுரை: விசாரணைக் கைதி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் கமேனி கொலை முதல்.. 10வது நாளில் ஈரான் போர்! என்ன நடக்கிறது?திருச்சியில் இன்று திமுக மாநில மாநாடு: முதல்வா் ஸ்டாலின் பங்கேற்பு!
/

வீடுகளில் திருடிய இளைஞர் கைது: 34 பவுன் நகை மீட்பு

புதுச்சேரியில் வீடுகளில் புகுந்து நகை, பணம் திருடிய சம்பவங்களில் தொடர்புடைய இளைஞரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்து முப்பத்து நான்கரை பவுன் நகைகள் மீட்கப்பட்டன.

News image
Updated On :9 ஜூலை 2018, 3:28 am

தினமணி

புதுச்சேரியில் வீடுகளில் புகுந்து நகை, பணம் திருடிய சம்பவங்களில் தொடர்புடைய இளைஞரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்து முப்பத்து நான்கரை பவுன் நகைகள் மீட்கப்பட்டன.
 புதுச்சேரியில் கடந்த சில நாள்களாக தொடர் திருட்டுச் சம்பவங்கள் நடைபெற்று வந்தன. இதைத் தடுக்கும் பொருட்டும், சம்பவங்களில் தொடர்புடைய நபர்களைப் பிடிக்கவும் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் அபூர்வா குப்தா உத்தரவிட்டார்.
 இதையடுத்து, கிழக்குப் பகுதி காவல் கண்காணிப்பாளர் வேங்கடசாமி, முத்தியால்பேட்டை காவல் ஆய்வாளர் ஹேமசந்தர் ஆகியோர் மேற்பார்வையில் காலாப்பட்டு உதவி ஆய்வாளர் சிவப்பிரகாசம் மற்றும் போலீஸார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
 இந்தத் தனிப்படைப் போலீஸார் புதுச்சேரி கனகசெட்டிக்குளம் கிழக்கு தேரோடும் வீதியில் சனிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த இளைஞர் ஒருவர் போலீஸாரைக் கண்டதும் ஓட முயற்சித்தார். இதனால் சந்தேகமடைந்த போலீஸார் அவரை விரட்டிப் பிடித்து விசாரணை நடத்தினர். இதில், அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததால், அவரை காவல்நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தினர்.
 விசாரணையில், அவர் விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் கூனிமேடுகுப்பத்தைச் சேர்ந்த சுமன் (எ) ஸ்ரீமன் (23) என்பதும், காலாப்பட்டில் ஓய்வுபெற்ற தனியார் நிறுவன ஊழியர் ரவிச்சந்திரன் வீட்டில் 37 பவுன் நகை திருடுபோன சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர் என்பதும் தெரியவந்தது.
 இதுதவிர, கீழ்புத்தூர், கடலூர் தேவனாம்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடப்பட்ட சம்பவங்களிலும் இவருக்கு தொடர்பு இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து சுமனை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் இருந்து முப்பத்து நான்கரை பவுன் நகைகளையும் மீட்டனர். பின்னர் அவரை புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.