ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தால் நேரம் விரயம்
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தால் பேரவையில் நேரம் விரயமாகிறது என்று அதிமுக பேரவைக்குழுத் தலைவர் ஆ.அன்பழகன் குற்றஞ்சாட்டினார்.
புதுவை சட்டப்பேரவையில் இருந்து திங்கள்கிழமை வெளிநடப்பு செய்த பின்னர் அதிமுக பேரவைக் குழுத் தலைவர் ஆ. அன்பழகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஆளுநர், முதல்வரின் அதிகார எல்லை மோதலால் அரசு நிர்வாகம் இரு பிரிவாக செயல்படுகிறது. பல துறைகளில் நிர்வாகம் ஸ்தம்பித்துள்ளது. புதிய திட்டங்கள் எதுவும் செயல்படுத்தாத நிலையில் நடைமுறையில் இருந்த மக்கள் நலன் சார்ந்த பல திட்டங்களும் மக்களைச் சென்றடையவில்லை. மாநிலத்தின் உள்கட்டமைப்பு வசதிகள் எதுவும் மேம்படுத்தப்படவில்லை.
மக்களைப் பாதிக்கும் குடிநீர் கட்டணம், மின் கட்டணம் உயர்வு, குப்பை வரி போன்றவைகள் குறித்து சட்டப்பேரவையில் எவ்வித விவாதமும் செய்யாமல் புதிய வரிகள் மற்றும் வரி உயர்வுகள் மக்கள் மீது திணிக்கப்படுகின்றனர்.
முதியோர், விதவைகளுக்கு மாதம்தோறும் வழங்கப்படும் ஓய்வூதிய நிதி உதவிக்கேட்டு 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தகுதியானவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
ஆட்சி அமைந்த 2 ஆண்டுகளில் இத்திட்டத்தில் புதிய பயனாளிகள் ஒருவருக்குக் கூட தரப்படவில்லை.
வாரத்துக்கு இரண்டு கொலை சம்பவங்கள் நடக்கின்றன. அரசுக்கு சாவல் விடும் நிலையில் தொடர் திருட்டு நடக்கிறது. மக்கள் தினமும் பயம் கலந்த பீதியோடு வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
ஆளுநர் உரையின் மீது நன்றி தெரிவிக்கும் விதத்தில் சட்டப்பேரவையில் நேரத்தை வீணடிப்பதில் கவனம் செலுத்தும் ஆட்சியாளர்கள் உருப்படியான மக்கள் நலத் திட்டங்கள் பற்றி விவாதத்துக்கு அனுமதிக்காதது ஜனநாயகத்துக்கு எதிரான செயலாகும்.
எங்களது ஒத்தி வைப்பு பிரச்னையை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளாததால் மக்கள் நலன் கருதி, வெளிநடப்பு செய்துள்ளோம் என்றார் அன்
பழகன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
