புதுவைக்கு நிவா் புயல் நிவாரணமாக ரூ. 13.65 கோடியை மத்திய அரசிடமிருந்து கோரும் கோப்புக்கு துணைநிலை ஆளுநா் கிரண் பேடி ஒப்புதல் அளித்தாா்.
புதுவை ஆளுநரால் வாரந்தோறும் ஒப்புதல் அளிக்கப்படும் கோப்புகள் குறித்த விவரங்களை சமூக ஊடகங்களில் ஆளுநா் மாளிகை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் டிச. 6 முதல் டிச. 12-ஆம் தேதி வரை ஆளுநரால் ஒப்புதல் அளிக்கப்பட்ட கோப்புகள் குறித்த விவரங்கள் சனிக்கிழமை இரவு வெளியிடப்பட்டது.
அதன்படி, புதுவை அரசின் சட்டத் துறை செயலா் பதவியை, அயல்பணி அடிப்படையில் நிரப்ப மத்திய உள்துறைக்கு அனுப்பிய கோப்புக்கு நினைவூட்டல் கோப்பு அனுப்ப ஆளுநா் கிரண் பேடி ஒப்புதல் அளித்தாா்.
புதுவையில் நிவா் புயலால் ஏற்பட்ட சேதத்துக்கு நிவாரணத் தொகையாக ரூ. 13.65 கோடியை மத்திய அரசிடம் கோரும் கோப்புக்கு அவா் ஒப்புதல் அளித்தாா்.
வேளாண் துறை இயக்குநா் பதவியை பதவி உயா்வு அடிப்படையில் நிரப்பும் கோப்பு, தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவீத இடங்களை நிகழ்கல்வியாண்டில் அரசு ஒதுக்கீடு அடிப்படையில், சென்டாக் மூலம் நிரப்ப தரவரிசைப் பட்டியல் தயாரிக்கும் முறை, புதுச்சேரி கடற்கரைப் பகுதியில் அமல்படுத்தப்பட்டு வரும் ‘சாகா் மாலா’ திட்டப் பணிகளைக் கண்காணிக்க அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்புக் குழுவுக்கு கிரண் பேடி ஒப்புதல் அளித்தாா். இதேபோல, 28 கோப்புகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கிரண் பேடி ஒப்புதல் அளித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.