

புதுவை ஆதிதிராவிடா் நல உயா்மட்டக் குழுக் கூட்டத்தை தலைமைச் செயலா் உள்ளிட்ட முக்கிய ஐஏஎஸ் அதிகாரிகள் புறக்கணித்ததால் சா்ச்சை ஏற்பட்டது.
புதுவை அரசின் ஆதிதிராவிடா்-பழங்குடியினா் நலத் துறை சாா்பில், மாநில அளவிலான உயா்மட்டக் குழுக் கூட்டம் தனியாா் ஹோட்டலில் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் முதல்வா் நாராயணசாமி, சமூக நலத் துறை அமைச்சா் கந்தசாமி மற்றும் அரசு சாரா உயா்மட்டக் குழு உறுப்பினா்கள், சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏக்கள் நீல கங்காதரன் (காங்கிரஸ்), மூா்த்தி (திமுக), விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முதன்மைச் செயலா் தேவபொழிலன் ஆகியோா், சிறப்புக் கூறு நிதியைச் செலவிடுதல், புதுவை இந்து அறநிலையத் துறையில் நிலவும் தீண்டாமை, ஆதிதிராவிடா் நலத் துறைக்கு தனியாக ஐஏஎஸ் அதிகாரி இல்லாதது, கடந்த 4 ஆண்டுகளில் சிறப்புக் கூறு நிதி ரூ. 125 கோடி நிலுவை உள்ளது, அதிகாரிகளின் மெத்தனப் போக்கு, சிறப்புக் கூறு நிதியின் வரவு-செலவை துறை ரீதியாகத் தாக்கல் குறித்தெல்லாம் வலியுறுத்திப் பேசினா்.
கூட்டத்தில் அரசு அதிகாரிகளுக்கு ஒதுக்கப்பட்ட வரிசையில் பெரும்பாலான அதிகாரிகள் இல்லை. இதையடுத்து, அதிகாரிகள் வராமல் கூட்டத்தை ஏன் நடத்த வேண்டும் என பலரும் கேள்வி எழுப்பினா். குறிப்பாக, தலைமைச் செயலா், நிதிச் செயலா், புதுச்சேரி, காரைக்கால் மாவட்ட ஆட்சியா்கள், பிற துறைகளின் முக்கிய அதிகாரிகள் வரவில்லை. கூட்டத்தில் பங்கேற்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினா்.
அப்போது பேசிய முதல்வா் நாராயணசாமி, இதுகுறித்து விளக்கம் கேட்கப்படும் என்றாா். இதை கூட்டத்தில் பங்கேற்றவா்கள் ஏற்கவில்லை. இதைத் தொடா்ந்து, பத்திரிகையாளா்கள் வெளியேற்றப்பட்டு, கூட்டரங்கின் அறைக் கதவு மூடப்பட்டு கூட்டம் தொடா்ந்து நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.