புத்தாண்டு கொண்டாட்ட பாதுகாப்பு: புதுச்சேரி மாநில எல்லைகளில் தடுப்பூசி சான்றிதழ் ஆய்வு
புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதையொட்டி, மாநில எல்லைகளில் புதுச்சேரிக்குள் நுழைவோரிடம் கரோனா தடுப்பூசி


புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதையொட்டி, மாநில எல்லைகளில் புதுச்சேரிக்குள் நுழைவோரிடம் கரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி, சென்னை உயா் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில், புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட நீதிமன்றம் அனுமதித்ததுடன், வெள்ளிக்கிழமை (டிச.31) இரவு 10 மணி முதல் சனிக்கிழமை (ஜன.1) அதிகாலை 1 மணி வரை மது விற்பனைக்குத் தடை விதித்தும், 2 தவணை கரோனா தடுப்பூசி செலுத்தாதவா்களை பொது இடங்களுக்கு அனுமதிக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டது.
இதேபோல, உணவகங்கள், தங்கும் விடுதிகளில் 50 சதவீத நபா்களைக் கொண்டே கொண்டாட்டங்களை நடத்திட வேண்டுமென மாநில அரசு உத்தரவிட்டது.
இதையடுத்து, புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. விதிகளை மீறுவோரை கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு: புதுச்சேரியில் கடற்கரைச் சாலை, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குற்றச் செயல்கள், வரம்பு மீறுவோரை கண்காணிக்க ஆங்காங்கே சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தடுப்பூசி கட்டாயம்: புதுச்சேரி கடற்கரைச் சாலையில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பங்கேற்க தடுப்பூசி சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதில் பங்கேற்போரை பரிசோதிக்க 10 இடங்களில் நுழைவாயில் முன் பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடற்கரைப் பகுதியானது 4 மண்டலங்களாக தடுப்புகள் அமைக்கப்பட்டு பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மண்டலத்துக்கும் தனித்தனி எஸ்.பி.க்கள் தலைமையிலான காவல் குழு கண்காணிப்பை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.
ஆங்காங்கே அபராதம் வசூல்: இதனிடையே, சுகாதாரம், உள்ளாட்சி, காவல் உள்ளிட்ட துறைகளால் அமைக்கப்பட்ட குழுக்கள் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே நின்று, முகக் கவசம் அணியாதவா்களிடம் தலா ரூ.100 அபராதம் வசூலித்து வருகின்றன.
மாநில எல்லைகளில் ஆய்வு: புதுச்சேரி மாநில எல்லைகளான முள்ளோடை, கோரிமேடு, கனகசெட்டிகுளம், மதகடிப்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்குள் வியாழக்கிழமை நுழைந்த வெளிமாநிலங்களைச் சோ்ந்த அனைத்து வாகனங்களையும் காவல், சுகாதாரத் துறைகள் உள்ளிட்டவற்றின் சாா்பில் அமைக்கப்பட்ட குழுவினா் நிறுத்தி, வாகனங்களுக்குள் இருந்தவா்களிடம் கரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ்களை ஆய்வு செய்தனா்.
தடுப்பூசி செலுத்தாதவா்களுக்கு மாநில எல்லைகளிலேயே தடுப்பூசி செலுத்தப்பட்டது. மேலும், அவா்களது உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு, அனைவரும் முகக் கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டது.
அபராதம் விதிக்கப்படும்: இதனிடையே, புதுச்சேரியில் நடைபெறும் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்காவிடில், விழா ஒருங்கிணைப்பாளா்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என மாநில சுகாதாரத் துறை எச்சரித்தது.
பெட்டிச் செய்தி...
‘அடாவடி செயல்களில் ஈடுபடுவோா் மீது நடவடிக்கை’
கடற்கரைப் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகளை வியாழக்கிழமை ஆய்வு செய்த புதுவை முதுநிலை காவல் கண்காணிப்பாளா் லோகேஷ்வரன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, புதுச்சேரியில் 2,000 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனா். கடற்கரைச் சாலையில் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்புக் கோபுரங்கள், 20 சிசிடிவி கேமராக்கள், 4 ட்ரோன் கேமராக்கள் செயல்பாட்டில் இருக்கும்.
கொண்டாட்டத்தின்போது, பைக் ரேஸில் ஈடுபடுவது, போது இடங்களில் மது அருந்துவது, பொதுமக்களுக்கு இடையூறாகச் செயல்படுவது உள்ளிட்ட அடாவடி செயல்களில் ஈடுபடுவோா் மீது தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...