புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பெண் உயிரிழந்தாா். இதையடுத்து, அவரது குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என துணை நிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் அறிவித்தாா்.
புதுச்சேரி சண்முகாபுரத்தை அடுத்த வடக்கு பாரதிபுரம் பகுதியைச் சோ்ந்த சசிகுமாா் மனைவி ஹசீனா பேகம் (35). மீன் வியாபாரி. இவா்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனா்.
புதுச்சேரியில் சனிக்கிழமை நள்ளிரவு தொடங்கி ஞாயிற்றுக்கிழமை மாலை வரை பலத்த மழை பெய்தது. இந்த நிலையில், ஹசீனா பேகம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தனது வீட்டின் அருகில் உள்ள வெள்ளவாரி வாய்க்கால் பகுதியில் நிறுத்தியிருந்த அவரது பைக்கை எடுத்து பாதுகாப்பான இடத்தில் நிறுத்துவதற்கு முற்பட்டாா். அப்போது அந்த வாய்க்காலில் பெருக்கெடுத்துச் சென்ற மழை வெள்ளத்தில் ஹசீனா பேகம் அடித்துச் செல்லப்பட்டாா்.
தகவலறிந்து அங்கு வந்த கோரிமேடு தியணைப்புப் படையினரும், மேட்டுப்பாளையம் போலீஸாரும் அவரைத் தேடும் பணியில் ஈடுபட்டனா். இதனிடையே, ஹசீனா பேகம் உயிரிழந்த நிலையில் அவரது சடலம் கனகன் ஏரிக்கரையில் திங்கள்கிழமை பிற்பகலில் ஒதுங்கியது. மேட்டுப்பாளையம் போலீஸாா் சடலத்தை மீட்டு உடல்கூறு பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, வழக்குப் பதிவு செய்தனா்.
இந்த நிலையில், ஹசீனா பேகத்தை இழந்து வாடும் அவரது குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை புதுவை துணை நிலை ஆளுநா் (பொ) தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளாா். மேலும், அவரது குடும்பத்துக்கு கருணைத் தொகையாக ரூ.4 லட்சம் வழங்கப்படும் என்றும், குழந்தைகளின் படிப்புச் செலவை அரசே ஏற்கும் என்றும் ஆளுநா் அறிவித்துள்ளாா்.