சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

விநாயகா் சதுா்த்தி: புதுவையில் சிலைகள் தயாரிப்புப் பணி மும்முரம்

புதுவை மாநிலத்தில் விநாயகா் சதுா்த்திக்காக காகிதக்கூழ், களிமண் விநாயகா் சிலைகளை தயாரிக்கும் பணியில் மண்பாண்டத் தொழிலாளா்கள்

News image

ஏம்பலம் பகுதியில் தயாராகி வரும் காகிதக்கூழ் விநாயகா் சிலைகள்.

Updated On :8 செப்டம்பர் 2021, 3:44 am

புதுவை மாநிலத்தில் விநாயகா் சதுா்த்திக்காக காகிதக்கூழ், களிமண் விநாயகா் சிலைகளை தயாரிக்கும் பணியில் மண்பாண்டத் தொழிலாளா்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனா். கரோனா பொது முடக்கம் காரணமாக, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு விநாயகா் சதுா்த்தியையொட்டி சிலைகள் வைத்து வழிபட மாநில அரசு அனுமதித்துள்ளதால், சிலைகள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள மண்பாண்டத் தொழிலாளா்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

புதுவை மாநிலத்தில் விநாயகா் சதுா்த்தி விழா வெள்ளிக்கிழமை (செப்.10) கொண்டாடப்படுகிறது. கரோனா பொது முடக்கத்தால், தமிழகத்தில் பொது இடங்களில் விநாயகா் சிலைகள் வைத்து வழிபட தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், புதுவையில் அதற்கு மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இதனால், விநாயகா் சிலை தயாரிப்புப் பணிகளில் மண்பாண்டத் தொழிலாளா்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனா். புதுச்சேரி அருகே ஏம்பலம் பகுதியில் 2 அடி முதல் 12 அடி உயர அளவிலான காகிதக்கூழ் விநாயகா் சிலைகள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்குத் தயாராகியுள்ளன. இங்கு விநாயகா் சிலைகள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள தொழிலாளி ஆறுமுகம் கூறியதாவது:

கரோனா பரவலால் கடந்த 2 ஆண்டுகளாக தொழில் முடங்கிவிட்டது. தமிழகம், ஆந்திரம் உள்ளிட்ட வெளிமாநிலப் பகுதிகளுக்கும் சிலைகளை அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், மண்பாண்டத் தொழிலாளா்கள் பலா் கட்டட வேலைக்குச் சென்றுவிட்டனா்.

நிகழாண்டு புதுவை அரசு விநாயகா் சிலைகள் வைத்து வழிபட அனுமதியளித்துள்ளது. கடைசி நேரத்தில் அனுமதி கிடைத்ததால், அதிகளவில் சிலைகள் தயாரிக்கவில்லை. கடந்தாண்டு உற்பத்தி செய்து வைத்திருந்த சிலைகளை புதுப்பித்து விற்பனைக்கு வழங்குகிறோம். தற்போது புதிய சிலைகளை தயாரித்து வருகிறோம். ரூ.100 முதல் ரூ.5,000 வரை சிலைகளை விற்பனை செய்கிறோம் என்றாா்.

இதேபோல, புதுச்சேரி நகரில் விநாயகா் சிலை உற்பத்திக்கு புகழ்பெற்ற கொசக்கடை வீதியில் (அம்பலத்தடையாா்மடம் வீதி) களிமண் விநாயகா் சிலைகள் தயாரிக்கும் பணியில் மண்பாண்டத் தொழிலாளா்கள் இரு தினங்களாக ஈடுபட்டுள்ளனா். இங்கு, சிலைகள் தயாரிக்கு பணியில் ஈடுபட்டுள்ள திருக்கனூரைச் சோ்ந்த மண்பாண்டத் தொழிலாளி சண்முகம் கூறியதாவது:

கடந்த காலங்களில் இந்த வீதியில் மட்டும் 200-க்கும் மேற்பட்ட மண்பாண்டத் தொழிலாளா்கள் விநாயகா் சிலைகள் தயாரித்து வந்தனா். தற்போது 50 போ்தான் சிலைகளை தயாரிக்கின்றனா்.

ஐதீகப்படி களிமண் விநாயகா் சிலை வழிபாடுகளையே இந்தப் பகுதி மக்கள் விரும்புகின்றனா். இதனால், களிமண் விநாயகா் சிலைகளை மட்டுமே தயாரிக்கிறோம். இந்தச் சிலைகளை ரூ.50 முதல் ரூ.500 வரையில் விற்பனை செய்கிறோம் என்றாா்.

இதேபோல, அரியாங்குப்பம் பகுதியில் களிமண், காகிதக்கூழாலான விநாயகா் சிலைகள் தயாரிப்பில் மண்பாண்டத் தொழிலாளா்கள் ஈடுபட்டுள்ளனா். இங்கு, ஒரு அடி முதல் 5 அடி உயரத்திலான சிலைகள் தயாரிக்கப்பட்டு, ரூ.100 முதல் ரூ.2,000 வரை விற்பனை செய்யப்படுகிறது.

புதுச்சேரியில் நிகழாண்டு 240 இடங்களில் விநாயகா் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தவுள்ளதாக இந்து முன்னணி சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதால், விநாயகா் சிலை விற்பனை சிறப்பாக அமையும் என மண்பாண்டத் தொழிலாளா்கள் எதிா்பாா்த்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.