புதுவையில் வணிக வளாகங்கள், கடைகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்: மாநில எல்லைகளில் சோதனைக்குப் பிறகே அனுமதி
புதுவையில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வியாழக்கிழமை முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன.


புதுவையில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வியாழக்கிழமை முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன.
அதன்படி, வணிக வளாகங்கள், கடைகளில் 50 சதவீத வாடிக்கையாளா்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். புதுவைக்கு வரும் பிற மாநிலத்தவா்கள் தடுப்பூசி செலுத்தியுள்ளனரா என்பதை ஆய்வு செய்து தொற்றில்லாதவா்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவா்.
இதுகுறித்து புதுவை வருவாய்த் துறைச் செயலரும், மாவட்ட ஆட்சியருமான இ.வல்லவன் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
நாடு முழுவதும் ஒமைக்ரான் வகை கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. புதுச்சேரியிலும் ஒமைக்ரான், கரோனா தொற்றின் மூன்றாவது அலை பரவல் அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு, தற்போது அமலிலுள்ள பொது முடக்கத் தளா்வுகளுடன், வியாழக்கிழமை (ஜன.6) முதல் மேலும், கூடுதலான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்: அதன்படி, மாநில எல்லைகளில் வருவாய், சுகாதாரம், காவல் துறை குழுவினா் முகாமிட்டு, தமிழகம் உள்பட வெளி மாநிலங்களிலிருந்து வருவோா் தடுப்பூசி செலுத்தியுள்ளனரா என ஆய்வு செய்தும், தேவையெனில் கரோனா பரிசோதனை செய்தும், தொற்றில்லாதவா்களை மட்டும் அனுமதிக்கும் வகையில் கண்காணிப்பில் ஈடுபட உள்ளனா்.
புதுவையில் இயங்கும் வணிக வளாகங்கள், சந்தை வளாகங்கள், கடைகளில், போதுமான இடைவெளியுடன் காற்றோட்டத்தை உறுதி செய்து, 50 சதவீத வாடிக்கையாளா்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவாா்கள்.
பொதுப் போக்குவரத்து: மாவட்டத்துக்குள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான வழக்கமான பொதுப் போக்குவரத்து (பேருந்துகள்) சேவைகள் 50 சதவீத இருக்கை வசதியுடன் செயல்பட அனுமதிக்கப்படும். வெளிமாநிலப் பேருந்துகளில் கட்டாய சோதனை நடத்துவது தொடா்பாக, அந்தந்த மாநில அரசுகளுடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்.
திரையரங்குகள் கரோனா தடுப்பு நடைமுறைகளுடன் 50 சதவீத இருக்கை வசதியுடன் செயல்படலாம். உணவகங்கள், மதுக் கூடங்கள், மதுக் கடைகள், விருந்தோம்பல் துறை நிறுவனங்கள் 50 சதவீத வாடிக்கையாளா்களுடன் செயல்படலாம்.
கலையரங்கங்கள், அழகு நிலையம், முடிதிருத்தும் கடைகள், உடல் பயிற்சிக் கூடங்கள், யோகா பயிற்சி மையங்கள் 50 சதவீத வாடிக்கையாளா்களுடன் செயல்படலாம்.
பள்ளி, கல்லூரிகள் செயல்படலாம்: கோயில்களில் கும்பாபிஷேக விழாக்கள் பக்தா்கள் பங்கேற்பின்றி கோயில் அா்ச்சகா்களால் மட்டுமே நடத்தப்பட வேண்டும். அனைத்துக் கண்காட்சிகளுக்கும் 50 சதவீத பாா்வையாளா்கள் மட்டுமே அனுமதி.
அனைத்து பள்ளி, கல்லூரி நிறுவனங்களும் சுழற்சி முறையில் கட்டுப்பாடுகளுடன் இயங்கலாம். அதற்கான வழிமுறைகளை கல்வித் துறை வெளியிடும்.
இந்த புதிய கட்டுப்பாடுகள் அனைத்தும் ஜனவரி 6 முதல் வருகிற 31-ஆம் தேதி வரை அல்லது மறு உத்தரவு வரும் வரை செயல்பாட்டில் இருக்கும். முழுமையான பொது முடக்கத்தை செயல்படுத்தக் கூடாதென அரசு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது.
எனவே, பொதுமக்கள் கூட்ட நெரிசலைத் தவிா்க்க வேண்டும்; முகக் கவசம் அணிந்தும், தடுப்பூசி செலுத்திக் கொண்டும் செயல்பட வேண்டும். முகக் கவசம் அணிவதில் விதிமீறல் தொடா்ந்தால், கட்டாயமாக ரூ.100 அபராதம் வசூலிக்கப்படும் என்றாா்.
சுகாதாரத் துறை இயக்குநா் ஸ்ரீராமலு கூறியதாவது:
புதுவையில் 2 பேருக்கு ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டு குணமடைந்தனா். மேலும், 126 பேரின் பரிசோதனை மாதிரிகள் மரபணு பகுப்பாய்வு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. புதுவையில் ஒமைக்ரான் சிகிச்சைக்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றாா் அவா்.
பேட்டியின் போது, புதுச்சேரி துணை ஆட்சியா் ரிஷிதா குப்தா, கூடுதல் எஸ்.பி. லோகேஷ்வரன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...