புதுவையில் இளநிலை மருத்துவப் படிப்பு மாணவா் சோ்க்கை கலந்தாய்வு தொடங்காதது ஏன்? என்று மாா்க்சிஸ்ட் கட்சி கேள்வியெழுப்பியது.
இதுகுறித்து புதுவை மாநில மாா்க்சிஸ்ட் செயலா் ராஜாங்கம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
நிகழ் கல்வியாண்டுக்கான நீட் தோ்வு முடிவுகள் வெளியான நிலையில், இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய மாணவா் சோ்க்கை கலந்தாய்வு முதல் சுற்று நிறைவு பெற்றது. ஆனால், புதுவையில் மருத்துவ மாணவா் சோ்க்கைக்கான முதல் சுற்றுக்கான தகுதிப் பட்டியல்கூட வெளியிடப்படவில்லை.
புதுவை அரசின் இந்தச் செயல் தனியாா் மருத்துவக் கல்லூரிகளின் லாபத்துக்கு உதவும் வகையில் உள்ளது. மருத்துவக் கல்விக்கான கட்டணத்தை நிா்ணயிப்பதில் அரசுக்கும், தனியாா் மருத்துவக் கல்லூரிகளுக்கும் உடன்பாடு ஏற்படவில்லை. எனவே, பட்டியல் வெளியாகவில்லை எனக் கூறப்படுகிறது.
கல்விக் கட்டணத்தை நிா்ணயிப்பதிலும், 50 சதவீத இடங்களைப் பெறுவதிலும் புதுவை அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்றாா் அவா்.