மீன் ஏலம், விற்பனைக்கு மறுப்பா? மீனவர்கள் போராட்டம்!

புதுச்சேரியில் பெரிய கடை பகுதியில் மீன்கள் ஏலம் விடவும், விற்பனை செய்யவும் மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து  300க்கும் மேற்பட்ட மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மீன் ஏலம், விற்பனைக்கு மறுப்பா? மீனவர்கள் போராட்டம்!
Updated on
1 min read

புதுச்சேரி: புதுச்சேரியில் பெரிய கடை பகுதியில் மீன்கள் ஏலம் விடவும், விற்பனை செய்யவும் மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 300க்கும் மேற்பட்ட மீனவர்கள் வியாழக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி நகரப்பகுதியில் பெரிய கடை மார்க்கெட் பகுதியில் குபேர் மீன் அங்காடி செயல்பட்டு வந்தது. நாள்தோறும் மீன் பிடி துறைமுகங்களில் இருந்து வரும் மீன்களை, அங்காடி முன்பு சாலையில் கொட்டி காலை நேரத்தில் ஏலம் விடுவதும், விற்பனை செய்வதும் நடைபெற்று வந்தது.

இதனால் மீன் கழிவுகளை சாலையில் விட்டுச்செல்வதால் பிரதான வணிக வீதியான நேரு வீதியில் துர்நாற்றம், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுவந்ததால், இவர்களுக்கு கிழக்கு கடற்கரை சாலையில் செயல்படும் நவீன மீன் அங்காடி மையத்தில் விற்பனை செய்ய இடம் மாற்றம் செய்யப்பட்டது.

ஆனால் மீன் வியாபாரிகள் அங்கு செல்லாமல் அந்த பகுதியிலேயே ஏலம் விட்டு வருகின்றனர். இதனால் வரும் அக். 1 ஆம் தேதி முதல் பெரிய கடை பகுதியில் மீன்கள் ஏலம் விடக்கூடாது, மொத்த வியாபாரம் செய்யக்கூடாது என புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் தடைவிதித்து உத்தரவிட்டு இருந்தார்.

மாவட்ட ஆட்சியரின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, வியாழக்கிழமை காலை மீன் விற்பனையில் ஈடுபடாமல் 300-க்கும் மேற்பட்ட மீனவர்கள் பெரிய கடை பகுதி, நேரு வீதி மற்றும் காந்தி வீதி சந்திப்பில் மறியலில் ஈடுபட்டதால் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து அங்கு வந்த பெரிய கடை காவல் துறையினர் சமாதானம் செய்து, மாவட்ட ஆட்சியரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என உறுதிமொழி அளித்ததை தொடர்ந்து மீனவர்கள் கலைந்து சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com