புதுச்சேரி: புதுச்சேரியில் குபேரங்காடியை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சீரமைப்பதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து திடீர் சாலை மறியல் போராட்டத்தால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் பெரிய சந்தை எனப்படும் குபேரங்காடியை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சீரமைப்பதற்கு நகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. கடைகளை இடித்துவிட்டு சீரமைக்க வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதையும் படிக்க | 4 மாநிலங்களுக்கு ரெட் அலர்ட்! இன்று கனமழை வாய்ப்பு!
வெள்ளிக்கிழமை காலை அண்ணா சாலை நேரு வீதி சந்திப்பில் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை நிறுத்தும் வரை தொடர்ந்து போராடுவோம் எனக் கூறி வியாபாரிகள் சாலை மறியலைத் தொடர்ந்தனர். இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் வலுகட்டாயமாக கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
போலீசாரின் கைது நடவடிக்கையை கண்டித்து பெண் வியாபாரிகளும் மறியலில் ஈடுபட்டனர். ஆனால் போலீசார் ஆண் வியாபாரிகள் மீது தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.