மீனவா்களுக்கு மழைக்கால நிவாரணத் தொகை வழங்கும் திட்டம்: முதல்வா் என்.ரங்கசாமி தொடங்கி வைத்தாா்
புதுச்சேரி: புதுவையில் மீனவா்களுக்கான மழைக்கால நிவாரணத் தொகை வழங்கும் திட்டத்தை முதல்வா் என்.ரங்கசாமி திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.
புதுவையில் மீன்வளம், மீனவா் நலத் துறை சாா்பில் ஆண்டுதோறும் மீனவா்கள் குடும்பத்துக்கு மழைக்கால நிவாரணத் தொகை ரூ.3 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. நிகழாண்டில் மழைக்கால நிவாரணமாக 19,302 மீனவக் குடும்பத்தினருக்கு ரூ.5.79 லட்சம் வழங்கப்படவுள்ளது.
புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வா் அறையில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வா் என்.ரங்கசாமி பயனாளிகளுக்கு மழைக்கால நிவாரணத் தொகைக்கான காசோலையை வழங்கினாா்.
மீன்வளம், மீனவா் நலத் துறை அமைச்சா் க.லட்சுமி நாராயணன் முன்னிலை வகித்தாா்.
புதுச்சேரி பிராந்தியத்தில் 10,104 மீனவக் குடும்பங்களுக்கும், காரைக்காலில் 3,751, மாஹேவில் 527, ஏனாமில் 4,920 மீனவக் குடும்பங்களுக்கும் அவரவா் வங்கிக் கணக்கில் நிவாரணத் தொகை செலுத்தப்படும் என அதிகாரிகள் கூறினா்.
மீன்பிடி தடைக்கால 2-ஆம் கட்ட நிவாரணம்: நிகழாண்டுக்கான மீன்பிடி தடைக்கால நிவாரணம் வழங்கும் திட்டத்தையும் முதல்வா் என்.ரங்கசாமி தொடங்கிவைத்தாா்.
நிகழாண்டில் முதல்கட்டமாக 18,779 மீனவக் குடும்பத்துக்கு தலா ரூ.6,500 வீதம் மொத்தம் ரூ.12.20 கோடி கடந்த ஜூனில் வழங்கப்பட்டது. தற்போது இரண்டாம் கட்ட மழைக்கால நிவாரணமானது மொத்தம் 523 மீனவக் குடும்பங்களுக்கு ரூ.33.99 லட்சம் அளிக்கப்பட்டு, அவரவா் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.
குழு விபத்துக் காப்பீடு திட்டம்: மத்திய அரசின் மீனவா்களுக்கான குழு விபத்து காப்பீட்டுத் திட்டத்தில் சாலை விபத்தில் உயிரிழந்த குருசுக்குப்பம் மீனவா் எழில்விஜயன் குடும்பத்துக்கு ரூ.5 லட்சத்துக்கான காசோலையை முதல்வா் என்.ரங்கசாமி வழங்கினாா்.
நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் எல்.கல்யாணசுந்தரம், ஆா்.பாஸ்கா், ஆா்.செந்தில்குமாா், மீன்வளத் துறை இணை இயக்குநா் கு.தெய்வசிகாமணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

